சென்னை: பாமக-வின் 35ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகே நாளை (ஆகஸ்ட் 30) பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி பாமக கட்சியின் மாவட்டச் செயலாளர் முத்துகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் அந்த மனுவில், பொதுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி நெய்வேலி டி.எஸ்.பி.-யிடம் விண்ணப்பித்ததாகவும், ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி விண்ணப்பத்தை நிராகரித்ததாகவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஆகஸ்ட் 29) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், பாமக கட்சி தொடங்கியது முதல் பல ஆண்டுகளாக அமைதியான முறையில் பொதுக் கூட்டம் நடத்தி வருவதாகவும், நாளைய (ஆகஸ்ட் 30) கூட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயாராக உள்ள நிலையில் அனுமதி வழங்க மறுப்பதாகவும், வடலூர் சந்திப்பில் அனுமதிக்காவிட்டால் குள்ளஞ்சாவடியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அரசு தரப்பில், விவசாயிகளுக்கு ஆதரவாக என்.எல்.சி-யை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது, 27 அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டது உள்ளிட்ட புகார்களில் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதன்மூலம் கட்சியின் செயல்பாடு வெளிப்படுவதாகவும் வாதிட்டார்.
மேலும், அதே இடத்தில் தற்போது பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்பதாகவும், அனுமதி கொடுத்தால் என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராகப் பேசும்போது, மீண்டும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படவும், காவல்துறை மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்புள்ளது எனவும், ஆகவே கடலூர் மாவட்டத்திற்கு வெளியே பொதுக்கூட்டம் நடத்தினால், அதற்கு அனுமதியளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் பாமக தரப்பில், என்.எல்.சி. மட்டுமல்லாமல், கடலூர் மாவட்ட மக்களின் மற்ற அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பொதுக் கூட்டத்தில் பேச உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.