தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 2, 2023, 8:59 PM IST

ETV Bharat / state

118 செங்கற்சூளைகளின் மின் இணைப்பை நாளைக்குள் துண்டிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் அதிரடி!

கோவையில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் 118 செங்கற்சூளைகளின் மின் இணைப்பை நாளைக்குள் (மார்ச் 3) துண்டிக்க வேண்டும் என மின்சார வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

118 செங்கற்சூளைகளின் மின் இணைப்பை நாளைக்குள் துண்டிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் அதிரடி!
118 செங்கற்சூளைகளின் மின் இணைப்பை நாளைக்குள் துண்டிக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் அதிரடி!

சென்னை:தமிழ்நாட்டில் யானைகள் வழித்தடங்களை பாதுகாப்பது மற்றும் மேற்குத்தொடர்ச்சிமலையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கக் கோரியது தொடர்பான வழக்குகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரதச் சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (மார்ச் 02) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, யானைகள் வழித்தடங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த செங்கற்சூளைகளின் மின் இணைப்பை துண்டித்தது குறித்து மின்சார வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 44 செங்கற்சூளைகளில், 32 சூளைகளுக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள சூளைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 118 செங்கற்சூளைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகவும், அவற்றின் மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து, ‘ஏற்கனவே மின் இணைப்பை துண்டிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஏன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது?’ என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘சட்ட விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்கக்கூடாது. அதனை ஆதரிக்கக் கூடாது’ என அரசுத்தரப்புக்கு அறிவுறுத்தினர். மேலும், ‘மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 118 செங்கற்சூளைகளின் மின் இணைப்பைத் துண்டிக்கக் கூறியுள்ள நிலையில், 44 சூளைகள் மட்டும் சட்டவிரோதமாக செயல்படுகிறது என எப்படி கூற முடியும்?’ என நீதிபதிகள் அரசுக்கு கேள்வி எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து மீதமுள்ள செங்கற்சூளைகளின் மின் இணைப்பு இரண்டு நாட்களில் துண்டிக்கப்படும் என அரசுத்தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, ‘நீதிமன்றம் உத்தரவிட்டும், சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்கின்றன. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின்படி, 118 சட்டவிரோத செங்கற்சூளைகளுக்கான மின் இணைப்பை நாளைக்குள் (மார்ச் 3) துண்டித்து, மார்ச் 6ஆம் தேதி மின்சார வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மின்சார வாரிய தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் உறுதி செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.

தொடர்ந்து தடாகம் பள்ளத்தாக்கில் மூடப்பட்ட சூளைகள் இரவில் செயல்படுவதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து, தடாகம் பள்ளத்தாக்கில் மூடப்பட்ட சூளைகளின் மின் இணைப்பையும் துண்டிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அப்பகுதிகளில் மண் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட குழிகளை மூடுவதற்கு, இறுதி வாய்ப்பாக அரசுக்கு மூன்று மாத காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், மேற்கொண்டு எந்த அவகாசமும் வழங்கப்படாது எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:அரசு ஊழியர்களுக்கு கேபிள் டிவி இணைப்பு தருவது குறித்த வழக்கு தள்ளுபடி - உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details