தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 9, 2022, 10:17 PM IST

ETV Bharat / state

எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு வழக்கு: இறுதி அறிக்கைக்கான தடை நீட்டிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு வழக்கு: இறுதி அறிக்கை தடை நீட்டிப்பு... சென்னை உயர் நீதிமன்றம்
எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு வழக்கு: இறுதி அறிக்கை தடை நீட்டிப்பு... சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை:முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, குற்றவியல் சட்டப்பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களை தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் எனவும், வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜூ ஆஜராக கூடாது எனவும் தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆட்சேபனைகளை நிராகரித்த தலைமை நீதிபதி அமர்வு, மனுக்களைத் தொடர்ந்து விசாரிக்கலாம் எனத் தெரிவித்ததுடன், வேலுமணி மனு மீதான இடைக்கால உத்தரவுக்காக விசாரணையை இன்று தள்ளி வைத்திருந்தது.

இதற்கிடையில் ஆட்சேபனைகளை நிராகரித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்காமல் விசாரணையை செப்டம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. இந்த நிலையில் இன்று, வேலுமணி தாக்கல் செய்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் மனு மீது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்படாததால் மனுவை விசாரிக்க வேண்டும் என்று வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு வலியுறுத்தினார். ஆனால், தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த மனுக்களை உயர் நீதிமன்றம் விசாரிப்பது முறையாக இருக்காது என்பதால் தள்ளிவைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து இந்த வழக்குகளின் விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், வேலுமணிக்கு எதிரான வழக்குகளில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தலை காற்றில் பறக்கவிட்ட பள்ளி நிர்வாகம்

ABOUT THE AUTHOR

...view details