சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகள் பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்பட்டு, கால்வாய் பகுதி் குப்பை பிரிக்கும் பகுதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என தனேஜா வீட்டுமனை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
அதில், மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் விதிகளைப் பின்பற்றி, குப்பை பிரிக்கும் பகுதி அமைக்காதது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் மட்டுமே அனுப்பியது. ஆனால் அதன்பின்பு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு நேற்று (மார்ச்.8) விசாரணைக்கு வந்தது. அப்போது, பயோ - மைனிங் செயல்முறை திட்டம் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளதால், மூன்று மாதங்களில் கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படும் எனப் பேரூராட்சி தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.