தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுடுகாட்டு மேற்கூரை ஊழல் வழக்கு; அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதியின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு! - graveyard roof scam

Selvaganapathy: அதிமுக ஆட்சியில் சுடுகாட்டு கூரை அமைத்ததில் ஊழல் செய்ததாக சிபிஐ பதிவுசெய்த வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செல்வகணபதி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 8:12 AM IST

சென்னை: கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், 1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த T.M.செல்வகணபதி இருந்தபோது, தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில் 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம், செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் ஜெ.டி.ஆச்சார்யலு, எம்.சத்தியமூர்த்தி உள்பட 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடந்த 2014ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதேநேரம், கூட்டுச் சதி குற்றச்சாட்டில் இருந்து இவர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.

இவ்வாறு கூட்டுசதி குற்றச்சாட்டில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிஐ தரப்பிலும், சிறை தண்டனையை எதிர்த்து செல்வகணபதி உள்ளிட்டோர் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில், 2014ஆம் ஆண்டில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை நடைபெற்றபோது, தண்டனை பெறப்பட்டவர்கள் தரப்பில், பணிகள் முடித்து 3 ஆண்டுகள் கழித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதன் பின்னர் ஒன்றரை ஆண்டிற்குப் பிறகே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும், சுடுகாடுகளுக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், திறந்தவெளி அமைந்திருந்ததாலும், அப்பகுதியில் உள்ளவர்களாலேயே கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் வாதிடப்பட்டது.

மேலும், புகார் அளித்த வழக்கறிஞர் ரவிச்சந்திரனிடம் விசாரிக்கவில்லை என்றும், உரிய ஆய்வு நடத்தாமல் இருந்த சிபிஐ திடீரென அறிக்கை தாக்கல் செய்ததை சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதும், தண்டனை வழங்கியதும் தவறு என்பதால், தீர்ப்பை ரத்து செய்து தங்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் வாதிடப்பட்டது.

அதேபோல் சிபிஐ தரப்பில், “மத்திய அரசு திட்ட நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. 100 சுடுகாடுகளுக்கு மேற்கூரை அமைக்க ஒப்புதல் அளித்துவிட்டு, 96 சுடுகாடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதிலும் தலா 23 லட்சம் ரூபாய் தொகையை பெற்றுக் கொண்டுள்ள நிலையில், 17 லட்சம் ரூபாய் அளவிற்கு மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது” என வாதிடப்பட்டது. எனவே சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை உறுதி செய்வதுடன், கூட்டுச்சதி குற்றச்சாட்டிலும் அனைவரையும் தண்டிக்க வேண்டுமென வாதிடப்பட்டது.

இவ்வாறு அனைத்து தரப்பு வாதங்களும் நவம்பர் 9ஆம் தேதி முடிவடைந்த நிலையில், வழக்குகள் மீதான தீர்ப்பை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், இந்த மேல்முறையீடு வழக்குகளில் இன்று காலை (நவ.28) நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளிக்க உள்ளார்.

இதையும் படிங்க:3 ஆண்டுகளாக இருசக்கர வாகனத்தில் குடிநீர் விநியோகமா? மதுரையில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details