தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் சங்கத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி - South Indian artist association election

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தலை திட்டமிட்டபடி வரும் 23ஆம் தேதி நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

actors

By

Published : Jun 21, 2019, 11:43 PM IST

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் இரண்டு பிரிவுகளாக களமிறங்கினர். இந்தத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று சங்கத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து, கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடிகர் சங்கத் தேர்தலை தற்காலிகமாக நிறுத்த மாவட்ட சங்கப் பதிவாளர் அலுவலகம் உத்தரவிட்டது. இந்நிலையில், பதிவாளரின் இந்த உத்தரவை எதிர்த்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அதில், அவர் 2017ஆம் ஆண்டு சந்தா செலுத்தாதவர்கள், செயற்குழு, பொதுக்குழுவில் தொடர்ந்து கலந்து கொள்ளாதவர்களுக்கு முறையான விளக்கம் கேட்கப்பட்டு, பின்னர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போது 3 ஆயிரத்து 171 உறுப்பினர்களுடன் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நீக்கம் செய்யப்பட்ட 61 பேர் வழங்கிய புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட இருப்பதால் தேர்தலை நடத்தக்கூடாது என மாவட்ட பதிவாளர் கடந்த 19ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தபோது, தேர்தலை திட்டமிட்டபடி 23ஆம் தேதி நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும், நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது எனவும், அதுவரை வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details