தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 7, 2022, 2:57 PM IST

Updated : Jul 7, 2022, 3:10 PM IST

ETV Bharat / state

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி  தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

நீதிமன்ற அவமதிப்பு மற்றும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி சண்முகம் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

சென்னை:கடந்த ஜூன் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக தலைமை தொடர்பான புதிய முடிவுகள் எடுக்க தடை கேட்டும், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரியும் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க மறுத்து, வழக்கை ஜூலை 11ஆம் தேதி தள்ளிவைத்தார். இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் தனித்தனியாக கையெழுத்திடப்பட்டு, இறுதி செய்யப்பட்ட 23 தீர்மானங்களை பொதுகுழுவில் முன்வைத்து, அவற்றில் எந்த முடிவையும் எடுக்கலாம் என்றும், மற்ற விவகாரங்களை ஆலோசிக்கலாமே தவிர முடிவெடுக்கக் கூடாது என உத்தரவிட்டது.

ஆனால் நீதிமன்றத்தில் தெரிவித்த 23 தீர்மானங்களை தவிர, நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக கருதி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு எதிராக சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

மேலும், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதே செல்லாது என்பதால், அவர் அறிவித்த அடுத்த பொதுக்குழு கூட்டம் குறித்த அறிவிப்பும் செல்லாது என்பதால், ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டுமென கோரி கூடுதல் மனுவையும் தாக்கல் செய்தார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில், இன்று (ஜூலை 7) மீண்டும் விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

அதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனுக்களை மட்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜூலை 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி மனு கொடுத்தவருக்கு அபராதம்

Last Updated : Jul 7, 2022, 3:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details