சென்னை:கடந்த 2022ம் ஆண்டு ஜூலை11 தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் தீர்மானங்களை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர அனுமதி வழங்கியது.
இதையடுத்து அதிமுகவில் இருந்து தங்களை நீக்கியும், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தது போன்ற தீர்மானங்களுக்கு தடை விதிக்க கோரியும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளின் விசாரணை நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் நடைபெற்றது. இந்த மேல்முறையீட்டு வழக்குகள் மீது ஏழு நாட்கள் நடைபெற்ற வாதம் கடந்த 15ம் தேதி நடைபெற்றது.
இதையடுத்து ஜூன் 28ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று இரு தரப்பினருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்து இருந்தனர். அதன்படி இன்றைய தினம், இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஓ.பி.எஸ் தரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப்பூர்வமான வாதத்தில், இந்த வழக்குகளில் தங்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.