தமிழ்நாடு

tamil nadu

எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தொடர்வதற்கு எதிரான வழக்கு; ஒத்தி வைத்த உயர் நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 5:16 PM IST

Quo warranto against eps: தேர்தலில் தகவல்களை மறைத்த எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.,வாக செயல்பட தடை விதிக்க வேண்டும் எனவும், எந்த தகுதியின் அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவராகவும், எம்.எல்.ஏ.,வாகவும் செயல்படுகிறார் என விளக்கம் கோரிய கோ வாரண்டோ மனு விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தொடர்வதற்கு எதிரான வழக்கு
எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தொடர்வதற்கு எதிரான வழக்கு

சென்னை: தேர்தல் விண்ணப்பங்களில் தவறான தகவல்களை அளித்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதனை நவம்பர் 3-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்புமனுவில் சொத்து, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை மறைத்து, தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளதாகக் கூறி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

வேட்புமனுவில் சொத்துக்களையும், கல்வித் தகுதியையும் மறைத்த செயல் தவறான நடத்தை மட்டுமல்லாமல், ஊழல் நடவடிக்கையும் கூட என அவரது மனுவில் தெரிவித்துள்ளார். வேட்புமனுவில் சொத்துக்கள் குறித்த விவரங்களை மறைத்ததுடன், இதுவரை எம்.எல்.ஏ.வாக பெற்ற ஊதியத்தையும் அவர் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "தமிழ்நாடு வரலாறு திமுக ஆட்சியில் தொடங்கவில்லை.. காமராஜர், கக்கனை மறந்த சோனியா, பிரியங்கா" - வானதி சீனிவாசன் கடும் விமர்சனம்!

அதனால், எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக செயல்பட எடப்பாடி பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், எந்த தகுதியின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிடுவதுடன், அவரை பதவி நீக்கம் செய்து, அவருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வசூலிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரதசக்ரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்,“எடப்பாடி பழனிசாமி ஆவணங்களை மறைத்து தேர்தலில் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், தேர்தலில் தகவல்களை மறைத்ததாகத் தேர்தல் வழக்கு தான் தொடர முடியுமே தவிர, தகுதி நீக்கம் வழக்கைத் தாக்கல் செய்ய முடியாது எனத் தெரிவித்தார்.

தகுதி இல்லாதவர் பதவி வகிப்பதை எதிர்த்து தான் கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்பதால் இந்த வழக்கைத் தாக்கல் செய்ய முடியாது எனத் தலைமை நீதிபதி சுட்டிக்காட்டினார். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கைத் தாக்கல் செய்ய முடியும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், தேர்தலில் தகவல்களை மறைத்ததற்காக என்ன தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மனுதாரருக்கு உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 3-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: "தமிழக முதலமைச்சர் நினைத்தால் காவிரிக்கு போராட்டம் அறிவிக்கலாம்" - பாமக முன்னாள் எம்.பி ஏ.கே.மூர்த்தி!

ABOUT THE AUTHOR

...view details