தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 28, 2021, 10:51 AM IST

ETV Bharat / state

பட்டினி கிடக்கும் பிராணிகள்: நிதியை உடனடியாக விடுவிக்க  நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு உணவளிக்க அரசு ஒதுக்கிய 9 லட்சம் ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras HC
சென்னை

கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலைத் தடுக்க தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெரு நாய்கள், விலங்குகள், உணவு, குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விலங்குகள் நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சிவா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து ஆய்வு செய்ய குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் நேற்று (மே.27) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆய்வுக்குழு சார்பிலும், தமிழ்நாடு கால்நடைத்துறை சார்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

கால்நடைத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், "தெரு நாய்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காகக் கால்நடைத்துறை சார்பில் 9 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஊரடங்கால் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ள வாயில்லா பிராணிகளுக்காக ஒதுக்கப்படும் நிதி அவற்றுக்கு செல்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ள 9 லட்சம் ரூபாய் நிதியை விரைவில் விடுவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இவ்வழக்கின் விசாரணையை மே 31ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details