தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 29, 2021, 9:44 PM IST

ETV Bharat / state

தமிழ்நாட்டின் மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு ஒன்றிய அரசு அங்கீகாரம் - மா. சுப்பிரமணியன்

ஒமைக்ரான் வைரஸ் தொற்றினை கண்டறிவதற்கான மரபணு பகுப்பாய்வு கூடத்திற்கு ஒன்றிய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மா சுப்பிரமணியன்
மா சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (டிசம்பர் 29) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “செப்டம்பர் 14 ஆம் தேதி உருமாறிய கரோனா வைரஸ் எந்த வகையை சேர்ந்தது என்பது உள்ளிட்டவற்றை ஆராய்ந்து கண்டறிவதற்காக, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் மரபணு பகுப்பாய்வு கூடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மாநில அரசால் அமைக்கப்பட்ட மரபணு பகுப்பாய்வகம்

4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தை, ஒன்றிய அரசின் அறிவியில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக கூட்டமைப்பு இன்று (டிசம்பர் 29) அங்கீகரித்துள்ளது. கரோனா வைரஸ் அதன் மரபணுவில் உண்டாகும் தொடர் மாற்றங்களினால் புதுவகையாக உருமாறி, நோய் தொற்றின் தாக்கத்தினை தீவிரப்படுத்துகிறது.

உருமாறிய கரோனா வைரஸ்களை கண்டறிய மரபணு பகுப்பாய்வகம் அவசியமாகும். இத்தகைய மரபணு பகுப்பாய்வகம், எந்த ஒரு மாநில அரசாலும் இதுவரை அமைக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் பரவும் கரோனா வைரஸ்களின் உருமாற்றத்தினை கண்டறிய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இன்ஸ்டீம் - பெங்களூர், சிடிஎஃப்டி - ஹதராபாத். என்ஐவி - புனே ஆகியவற்றில் இயங்கும் மரபணு பகுப்பாய்வகங்களுக்கே கரோனா மாதிரிகள் அனுப்பப்பட்டன. இதன் காரணமாக பகுப்பாய்வு முடிவுகள் தாமதமாக பெறப்பட்டு வந்தன.

இப்போது தமிழ்நாட்டின் மரபணு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், உருமாறிய கரோனா வைரஸ்களை ஆரம்ப நிலையிலேயே விரைவாக கண்டறிந்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனால் கரோனாவின் தாக்கத்தினை பெருமளவு தடுத்திட இயலும்” என்றார்.

இதையும் படிங்க:SI Audio: ஆளும் கட்சிப் பிரமுகர்கள் தொல்லை - தற்கொலை செய்யப்போவதாக ஆடியோ வெளியிட்ட எஸ்ஐ

ABOUT THE AUTHOR

...view details