நிவர் புயல் பாதிப்பு காரணமாக ஏற்கெனவே டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட சில ரயில் சேவைகள் நாளை (நவ.26) முதல் 28 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
ரயில்கள் ரத்துப் பட்டியல்:
கன்னியாகுமரி - நிஜாமுதீன் சிறப்பு ரயில், ராமேஸ்வரம் - வாரணாசிக்கு அருகேயுள்ள மந்துதிஹ் ரயில் நிலையம் செல்லும் சிறப்பு ரயில்கள் இன்று (நவ.25) ரத்து செய்யப்படுகின்றன.
காரைக்குடி - சென்னை எழும்பூர், மதுரை - சென்னை எழும்பூர், சென்னை - எழும்பூர் - திருச்சி ஆகிய சிறப்பு ரயில்கள் நவம்பர் 26ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
நிஜாமுதீனிலிருந்து கன்னியாகுமரி வரும் சிறப்பு ரயில் வரும் நவம்பர் 28 ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
பகுதி அளவு ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விவரம்:
மைசூரு - மயிலாடுதுறை சிறப்பு ரயில் இன்று (நவ.25) - திருச்சியிலிருந்து மைசூரு வரை மட்டுமே இயக்கப்படும்.
மயிலாடுதுறை - மைசூரு சிறப்பு ரயில் நாளை (நவ.26) - திருச்சியிலிருந்து மைசூரு வரை மட்டுமே இயக்கப்படும்.
எர்ணாகுளம் - காரைக்கால் சிறப்பு ரயில் இன்று (நவ.25) - எர்ணாகுளத்திலிருந்து திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும்.
காரைக்கால் - எர்ணாகுளம் சிறப்பு ரயில் நாளை (நவ.26) - திருச்சியிருந்து எர்ணாகுளம் வரை மட்டுமே இயக்கப்படும்.
மயிலாடுதுறை - கோவை ஜன சதாப்தி சிறப்பு ரயில் நாளை ( நவ.26) கோவையிருந்து திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும்.
அதே போல், வெளி மாநிலங்களிலிருந்து சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் ரயில்களும் பகுதி அளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இன்று, நவம்பர் 25 ஆம் தேதி, திருவனந்தபுரத்திலிருந்து டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் சிறப்பு ரயில் திருவனந்தபுரத்திலிருந்து ஈரோடுடன் நிறுத்தப்படும். மங்களூரு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் சிறப்பு ரயில் சேலத்துடன் நிறுத்தப்படுகிறது. அதே போல், இன்று ஆழப்புழாவிலிருந்து எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் வரும் சிறப்பு ரயில் ஈரோடு ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மேலும், நாளை, நவம்பர் 26 ஆம் தேதி, எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் சிறப்பு ரயில் பகுதி அளவு ரத்து செய்யப்பட்டு, கோவையிலிருந்து திருவனந்தபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்.எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மங்களூரு செல்லும் சிறப்பு ரயில் பகுதி அளவாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் சேலத்திலிருந்து மங்களூரு வரை செல்லும். எம்ஜிஆர் ரயில் நிலையம் முதல் ஆழப்புழா புறப்படும் ரயில், ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து ஆழப்புழாவுக்கு பயணிக்கும்.
எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சென்று வரும் பின் வரும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை, நவம்பர் 26, சென்ட்ரல் முதல் கோவை செல்லும் இரண்டு சிறப்பு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கேஎஸ்ஆர் பெங்களூரு செல்லும் சிறப்பு ரயில், கோவையிலிருந்து சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரயில், கே.எஸ்.ஆர் பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் சிறப்பு ரயில், சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி செல்லும் சிறப்பு ரயில், திருப்பதியிலிருந்து சென்ட்ரல் செல்லும் சிறப்பு ரயில் ஆகியவை நாளை, நவம்பர் 26, முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
நிவர் புயல் காரணமாக ரயில்வே துறையால் முழுமையாக ரத்து செய்ய்பட்ட ரயில்களில் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் முழுவதுமாக திரும்பச் செலுத்தப்படும். இணையதளம் வாயிலாக டிக்கெட் பெற்றவர்களுக்கு தானாக கட்டணம் திரும்பச் செலுத்தப்படும் என்றும், முன்பதிவு நிலையங்களில் பெற்றவர்கள், ரயில் புறப்படும் தேதியிலிருந்து 6 மாதத்துக்குள் நேரடியாக முன்பதிவு நிலையங்களுக்குச் சென்று பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.பகுதி அளவாக ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு, குறிப்பிட்ட தூரத்துக்கான கட்டணம் திரும்பச் செலுத்தப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துல்ளது.