சென்னை: பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "10 மற்றும் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் முகப்பு பக்கத்தில் தேர்வு எண், EMIS எண், தேர்வு நாள், பாடம், மொழி ஆகிய விவரங்கள் மட்டும் இருத்தல் வேண்டும். கூடுதல் விடைத்தாள்களின் எண்ணிக்கை, விடைத்தாள்களின் மொத்த பக்க எண்ணிக்கை போன்ற விவரங்கள் மாணவர்களால் குறிப்பிடப்பட வேண்டும்.
மாணவர்கள் எழுதிய விடைத்தாள்களின் அனைத்து பக்கங்களிலும் அறை கண்காணிப்பாளர் கையொப்பமிட வேண்டும். அனைத்து விடைத்தாள்களும் பள்ளி அளவிலேயே பாட ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து மதிப்பெண் பதிவேடுகள் பராமரிப்பு செய்திட வேண்டும். 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு A மற்றும்; B என இரண்டு வகை வினாத்தாள் கட்டுகள் பாதுகாப்பு மையத்திற்கு வரும்.
A அல்லது B வினாத்தாள்: இதில் தேர்வு நடைபெறும் நாளன்று காலை 8 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலரால் எந்த வகை ( A அல்லது B) வினாத்தாள் கட்டுகள் வழங்கப்பட வேண்டும் என வினாத்தாள் பாதுகாப்பு மையத்திற்கு தெரிவிக்கப்படும். ஒவ்வொரு தேர்வு நாளன்று காலையில் நடைபெறும் தேர்விற்கு காலை 8 மணியளவிலும், மதியம் நடைபெறும் தேர்விற்கு காலை 11.30 மணியளவிலும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.
வினாத்தாள்கள் மிகவும் ரகசியத்தன்மை வாய்ந்தது என்பதால், அதனை எடுத்துச் செல்ல தகுந்த பாதுகாப்புடன் கூடிய வாகன ஏற்பாட்டை அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் - முதல்வர்கள் செய்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். பேருந்திலோ அல்லது இருசக்கர வாகனத்திலோ எடுத்துச் செல்லக் கூடாது.