தமிழ்நாடு

tamil nadu

வேளச்சேரியில் இருந்த இரண்டுபேர் மீது சட்டக்கல்லூரி மாணவர்கள் கொலைவெறித்தாக்குதல்!

By

Published : Jul 19, 2022, 8:31 PM IST

வேளச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவர்கள், அப்பகுதியைச் சேர்ந்த இருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வேளச்சேரியில் இருவர் மீது சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்குதல்- போலீசார் விசாரணை
வேளச்சேரியில் இருவர் மீது சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்குதல்- போலீசார் விசாரணை

சென்னைஅருகே வேளச்சேரி, அம்பிகா நகரைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன்(28), இவர் ஐ.ஐ.டி-யில் சிவில் பிரிவில் கான்கிரீட் கலவை தணிக்கை செய்யும் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் வெற்றிச்செல்வன் மற்றும் அவரது நண்பர் சரவணன்(22), இருவரும் மது அருந்திவிட்டு வேளச்சேரி டான்சி நகர் அருகே டீக்கடை வெளியே சிக்கன் பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது வெற்றிச்செல்வன் அவரது காதலியிடம் செல்போனில் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்.

இதனை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞர் சுரேஷ்(25) என்பவர் வேடிக்கை பார்த்துள்ளார். ’ஏன் என்னையே பார்க்கிறாய்’ எனக் கேட்டபோது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே வழக்கறிஞர் சுரேஷ், சட்டக்கல்லூரி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோரை வரவழைத்து இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். கற்களைக்கொண்டு தாக்கியதில் வெற்றிச்செல்வனுக்குப் பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இரு தரப்பும் மோதிக் கொண்டது தொடர்பாக பொதுமக்கள் வேளச்சேரி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். படுகாயமடைந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சம்பந்தப்பட்ட இரு தரப்பும் புகார் அளித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக அடையாறு துணை ஆணையர் மகேந்திரன் நேரில் வந்து சட்டக்கல்லூரி மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

வேளச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகளில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது; சட்டம் படிப்பவர்கள் என்பதால் போலீசார் அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்வதில்லை; சமீபத்தில் வேளச்சேரி 100 அடி சாலையில் மதுக்கடையை சூறையாடி சட்டக்கல்லூரி மாணவர்கள் பார் ஊழியரை அடித்தனர்.

இவ்விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்க இல்லை, உணவகம் ஒன்றில் சாப்பிட வந்த நபரை அடித்து பல்லை உடைத்தபோதும் வழக்குப்பதிவு செய்யவில்லை, காவலர் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டபோதும் வழக்குப்பதிவு செய்யவில்லை, இப்படி காவல் துறையினர் கண்டும் காணாமல் இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:3டி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிகளவில் ராக்கெட் உற்பத்தி செய்ய திட்டம்: காமகோடி வீழிநாதன்

ABOUT THE AUTHOR

...view details