சென்னை: சென்னை தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர் புத்தர் நகரைச் சேர்ந்த சபாபதி (37) - மாலதி (31) தம்பதியினர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சபாபதி காலையில் வேலைக்குச் சென்றுள்ளார் - அவரது மனைவி மாலதி உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். மாலையில் மாலதி வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டில் இருந்த 3 சவரன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் காணாமல் போனது தெரியவந்தது. பூட்டியிருந்த வீட்டில் பூட்டை உடைக்காமல் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு மாலதி அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை குற்றப்பிரிவு போலீசாரிடம் சபாபதி புகார் அளித்துள்ளார். புகாரை பதிவு செய்த போலீசார் மாலதி வீட்டின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். அப்போது ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் அணிந்த இளம்பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் மாலதி வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்தது.
அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரிக்கலாம் என்று பார்த்தபோது, வாகனத்தின் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்ததால் இந்தப் பெண்மணி நகையைத் திருடி இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். பின்னர் மூன்று நாட்களாக தொடர்ந்து சுமார் 47 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வரும் சோசியல் மீடியா இன்புஃளுயன்சரான அனீஷ் குமாரி (33) என்ற பெண்மணி நகை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.