உள்ளாட்சித் துறையில் பல்வேறு பிரிவினருக்கும் ஏற்றதுபோல குறைந்த பட்ச ஊதியத்தை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கும் முறை தமிழ்நாட்டில் உள்ளது. அதன் அடிப்படையில் உள்ளாட்சித் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியத்தை மறு நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் குழு ஒன்றை அமைக்கும் உத்தரவை தொழிலாளர் நலத்துறை பிறப்பித்துள்ளது. இந்தக் குழுவின் தலைவராகத் தொழிலாளர் துறை இணை ஆணையரும் செயலராக செயலாக்க பிரிவு உதவி ஆணையரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணா தொழிற்சங்க பேரவை ராசு, இந்திய தொழிற்சங்க மையத்தைச் சேர்ந்த கணேஷன், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் ஜெயச்சந்திரன் ஆகியோர் தொழிலாளர் தரப்புப் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி நிர்வாக இணை இயக்குநர் தனலட்சுமி, ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் ராஜ ஸ்ரீ, சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை துணை ஆணையர் மதுசுதன் ரெட்டி ஆகியோர் வேலையளிப்போர்களின் தரப்புப் பிரதிநிதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.