சென்னை: முன்னாள் நிதி அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் மற்றும் சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவரது மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய 9 இடங்களில் சிபிஐ இன்று (மே.17) காலை முதல் திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் பைக்கிராப்ட்ஸ் சாலையில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடு, நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் என சென்னையில் மூன்று இடங்களிலும், கர்நாடகா, பஞ்சாப், ஒடிசா, மும்பை உட்பட ஒன்பது இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.
ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கனவே ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை பலமுறை சோதனை நடத்தியது. இந்நிலையில், இந்த முறை கார்த்தி சிரம்பரம் மீது மேலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி ரூபாய் அன்னிய முதலீட்டில் முறைகேடு நடத்தப்பட்டதாக 2017 ஆம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. அந்த வழக்கில் 2019 ஆம் ஆண்டு முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் கைது செய்யப்பட்டார். மேலும், வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் சென்னையைச் சேர்ந்த பாஸ்கரராமன் என்பவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.