தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 28, 2020, 7:13 PM IST

ETV Bharat / state

'சாத்தான்குளம் சம்பவம் நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நிகழலாம்' - கமல்ஹாசன்

சென்னை: சாத்தான்குளத்தில் நிகழ்ந்திருக்கும் ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணமும் அதைச் சுற்றி நிகழ்ந்திருக்கும் மனித உரிமை மீறல்களும், சட்ட மீறல்களும் நம்மில் எவருக்கு வேண்டுமானாலும் நிகழக்கூடும் என்ற அச்சத்தை நம்மிடையே விதைத்திருக்கிறது என மக்கள் நீதி மையத் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கமல்
கமல்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நடிகரும் மக்கள் நீதி மைய கட்சித் தலைவருமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரத்தம் சொட்ட சொட்ட இருவரையும் தாக்கும் மூர்க்கத்தனம் கொலை பாதக குற்றம். அதை செய்பவர் எவராக இருந்தாலும் அந்த தவறுக்காக தண்டனை வழங்கப்பட வேண்டும். இரண்டு காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதைப் பார்க்கும்போது, அரசு இந்த விஷயத்தில் துளிகூட உண்மை தன்மையை கண்டறிய முயலவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் நினைத்தால், இரண்டு கைதிகளை காவல் நிலையத்திலிருந்து சிறைச்சாலைக்கு மாற்றிவிட முடியுமா? அவ்வாறு செய்ய எத்தனை துறைகள் அவர்களுக்கு உதவி இருக்க வேண்டும்? எத்தனை பேர் உடன் இருந்திருக்க வேண்டும்? அந்த உண்மைகளை ஆராயாமல் பெயரளவில் எடுக்கப்படும் நடவடிக்கை எதற்கும் உதவாத ஒன்று என்பது அரசுக்கு புரியவில்லையா? அல்லது இது போதும் என்று அரசு நினைக்கிறதா?

இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவியும் நிவாரணமும் தேவைதான். ஆனால் அதை மட்டும் அவசரமாக அறிவித்துவிட்டு, இந்த கொலைகளை முதலமைச்சர் கடந்து விடக்கூடாது. இரண்டு உயிர்களுக்கும் நீதி தேவை.

இந்தக் கொலைகளில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அனைத்திற்கும் மேலாக காவல் துறையில் கொலைகளை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் அரசும் அந்த காவல்துறையை ஏவி மக்களை நசுக்கும் முதலமைச்சரும் இதில் முதல் குற்றவாளிகள்.

தன் கையாலாகாத நிலையை அடக்குமுறையில் ஒழிக்கப் பார்க்கும் முதலமைச்சர் கரோனாவைத் தடுக்க காவல் துறையின் தடைகளை நாடுகிறார். எத்தனை முறை நாம் எதிர்த்தாலும் தன் விருப்பத்திற்கு செயல்பட்டு தவறுகளை திருத்திக் கொள்ளாமல் தொடர்ந்து, மக்களின் உயிருடனும் உணர்வுகளுடனும் விளையாடும் இந்த அடிமை அரசின் ஆணவத்தை ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டு, எழுப்பப்படும் நம் குரல் அசைத்துப் பார்க்கட்டும். எந்த தவறும் செய்யாமல் கொலையான இரண்டு அப்பாவி உயிர் போல, இனி எந்த ஒரு உயிரும் பாதிக்கப்படாது இருக்க, இதை செய்ய வேண்டியது நம் கடமையாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details