சென்னை: அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சிவில் வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது, அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது என கூறியுள்ளனர்.
மேலும், பொதுச்செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், கடந்த டிசம்பர் மாதம் நடந்த உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும்" எனவும் கோரப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கட்சியின் உறுப்பினர்களாக இல்லாத மனுதாரர்களுக்கு, இந்த வழக்கை தாக்கல் செய்ய உரிமையில்லை என்பதால், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனிடையே, வழக்கு தொடர அனுமதி கோரி ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மனு நீதிபதி வேல்முருகன் முன் நேற்று (ஏப்ரல்.26) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கடந்த 2000ம் ஆண்டு முதல் கட்சியின் உறுப்பினராக உள்ளதாகவும், உறுப்பினர் அட்டை புதுப்பிக்கப்பட்டு, இன்று வரை உறுப்பினராக உள்ளதாகவும் வாதிடப்பட்டது.
இதனையடுத்து, இதை மறுத்து அதிமுக நிர்வாகிகள் (ஓபிஎஸ், ஈபிஎஸ்)தரப்பில், உறுப்பினர் அட்டையைப் புதுப்பித்ததாகக் கூறி மனுதாரர் தாக்கல் செய்த ஆவணம் போலியானது என வாதிட்டனர். மேலும், கட்சியில் ஒரு பிரிவினரைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறும் மனுதாரர், அதற்கான ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை எனவும் அதிமுக நிர்வாகிகள் தரப்பில் வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உண்மையான உறுப்பினர் அட்டையைத் தாக்கல் செய்ய மனுதாரர் ராம்குமார் ஆதித்தனுக்கு உத்தரவிட்டு, வழக்கு தொடர அனுமதி கோரிய மனு மீதான உத்தரவை இன்று (ஏப்ரல் 26) தள்ளிவைத்துள்ளார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு எதிரான வழக்கு தள்ளுபடி