தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு எப்போது? - senthil balaji case in session court

Senthil Balaji Bail petition: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீதான வழக்கு இன்று (செப்.15) விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 7:07 PM IST

சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்தார். இதனையடுதது இந்த மனுவை விசாரிப்பதில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சூழல் நிலவியது.

இதனையடுத்து, அமலாக்கத்துறை வழக்கில் கைதானதால் ஜாமீன் மனு மட்டுமல்லாமல், செந்தில் பாலாஜியின் முழு வழக்கையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கு ஆவணங்களை அமர்வு நீதிமன்றத்திற்கு உடனடியாக மாற்ற உத்தரவிட்டது.

இதன்படி அமர்வு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு இன்று (செப்.15) விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில், "குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை. மத்திய பாரதிய ஜனதா கட்சியின் தூண்டுதலின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் எப்போது நடைபெற்றது என குறிப்பிடப்படவில்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:இந்து தர்மத்திற்கு எதிரான கருத்துக்களால் திமுக செல்வாக்கை இழந்து கொண்டிருக்கிறது- அர்ஜூன் சம்பத்

ABOUT THE AUTHOR

...view details