தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 23, 2019, 6:22 PM IST

Updated : May 23, 2019, 6:31 PM IST

ETV Bharat / state

எளிய குடும்பத்தில் பிறந்து நாடாளுமன்றம் செல்லும் ஜோதிமணி!

கரூர்: மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, அதிமுக வேட்பாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையை மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றுள்ளார்.

jothimani

கரூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணி களமிறக்கப்பட்டார். இவர் அதிமுக எம்.பி.யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையை எதிர்த்துப் போட்டியிட்டார்.

இந்நிலையில் இன்று காலை முதல் மக்களவைத் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ஆரம்பம் முதலே முன்னிலை வகித்த ஜோதிமணி, தம்பிதுரையைக் காட்டிலும் மூன்று லட்சத்து 6,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்ல உள்ளார்.

அரசியல் பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்த ஜோதிமணி

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள பெரியதிருமங்கலம் என்ற குக்கிராமத்தில் சென்னிமலை - முத்துலட்சுமி தம்பதிக்கு ஜோதிமணி பிறந்தார். அரசியல் பின்னணி இல்லாத எளிமையான குடும்பத்தில் பிறந்த இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணிதமும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை, எம்.பில் படிப்பையும் நிறைவு செய்தார்.

கல்லூரி காலம் முதல் தன்னை அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக்கொண்ட ஜோதிமணி, அரவக்குறிச்சி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த எஸ்.எஸ்.சதாசிவத்தைக் குருவாக ஏற்றுக்கொண்டு, பொதுவாழ்க்கையில் கால்பதித்தார். 1996ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு, கூடலூர் மேற்குப் பகுதி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராகத் தேர்வானதே இவரது அரசியல் பயணத்தின் முதல் வெற்றி. தொடர் செயல்பாடுகளால் 2001இல் மீண்டும் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரானார்.

பின்னர், ப.சிதம்பரம் தொடங்கிய காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையில் கரூர் மாவட்டத் தலைவராக இருந்தார். மீண்டும் காங்கிரஸில் சிதம்பரம் இணைந்தபோது, கரூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவராக ஜோதிமணிக்கு வாய்ப்பளித்தார்.

தன்னை பொதுவாழ்க்கைக்கு அர்ப்பணித்த ஜோதிமணி

திருமணமே செய்துகொள்ளாமல் பொதுவாழ்க்கைக்காகத் தன்னை அர்ப்பணித்த ஜோதிமணி, 2006ஆம் ஆண்டு அமெரிக்க கவுன்சில் ஆண்டுதோறும் நடத்தும் உலகளாவியலான இளம் அரசியல்வாதிகளுக்கான வெள்ளை மாளிகை சந்திப்பில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார்.

இளைஞர் காங்கிரஸைக் கையில் எடுத்த ராகுல்காந்தி ஆற்றல்மிகு நிர்வாகிகளைத் தேர்வு செய்தார். அப்போது ஜோதிமணியைத் தேர்வு செய்த ராகுல், அவரை இளைஞர் காங்கிரசின் தேசியச் செயலாளராக நியமித்தார்.

அரசியலில் ஏறுமுகம் கண்ட ஜோதிமணி

அதோடு, இளைஞர், மகளிர் காங்கிரஸை வலுப்படுத்த உள்கட்சி மேற்பார்வையாளராகவும் சட்டபேரவைத் தேர்தல் குழுவிலும் நியமிக்கப்பட்டு தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, அஸ்ஸாம், கேரளா என்று பல மாநிலங்களில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார். அதன்பிறகு, கட்சியின் செய்தித் தொடர்பாளராகத் தொடர்கிறார். இவை தவிர, 2007 முதல் 2010 வரை தமிழ்நாடு தணிக்கை வாரியக்குழுவில் ஒருவராக இருந்தார்.

Last Updated : May 23, 2019, 6:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details