தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Jan Shatabdi express: சென்னையில் ஜன் சதாப்தி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு பேசின் பிரிட்ஜ் பணிமனைக்குச் சென்ற ஜன் சதாப்தி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

By

Published : Jun 9, 2023, 10:16 AM IST

Updated : Jun 9, 2023, 10:53 AM IST

Shatabdi express: சென்னையில் சதாப்தி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து
Shatabdi express: சென்னையில் சதாப்தி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை:சென்னையில் உள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில்(Puratchi Thalaivar Dr MGR Central railway station) நிலையத்திற்கு நேற்று (ஜூன் 8), ஆந்திரா மாநிலத்தின் விஜயவாடா ரயில் நிலையத்தில் இருந்து ஜன் சதாப்தி விரைவு ரயில் வந்தது. பின்னர், அங்கு பயணிகளை இறக்கி விட்டுவிட்டு ரயிலானது பேசின் பிரிட்ஜ் பணிமனைக்குச் சென்று கொண்டிருந்தது.

அப்போது, இரண்டு ரயில் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி உள்ளது. இதனையடுத்து, சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு ரயில்வே ஊழியர்கள் அதனைச் சரி செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் எந்த வித சேதமும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, நேற்று (ஜூன் 8) நீலகிரி மாவட்டம் குன்னூர் ரயில் நிலையத்தில் இருந்து நீலகிரி மலை ரயில் புறப்பட்டது. அவ்வாறு புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் ரயிலில் இருந்த 4வது பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து, ரயில்வே பொறியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். அதேநேரம், ரயிலில் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த 150க்கும் மேற்பட்ட பயணிகள், ரயிலில் இருந்து இறக்கி விடப்பட்டு, பேருந்துகளில் மாற்றி பயணம் செய்ய வைக்கப்பட்டனர்.

அதேபோல், இந்த விபத்து சிறிய விபத்து எனவும், இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் சீரமைப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டு இன்று (ஜூன் 9) காலை மீண்டும் இதே வழித்தடத்தில் ரயில் இயக்கப்படும் எனவும் ரயில்வே தரப்பில் தெரிவித்தனர்.

மேலும், கடந்த ஜூன் 2ஆம் தேதி ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ஹவுரா அதிவிரைவு ரயில், கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானதில் 275 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு இடங்களில் ரயில் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டின் திருச்சி அருகே தண்டவாளத்தில் டயர் கிடந்தது, குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயிலின் பெட்டியில் விரிசல், திருப்பத்தூர் ரயில்வே சிக்னல் உடைக்கப்பட்டது, ஆவடி அடுத்த திருநின்றவூர் ரயில் பாதையில் தென்னை மரத் துண்டு கிடந்தது என அடுத்தடுத்த சம்பவங்கள் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Durg-Puri Express: ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து.. துர்க் - புரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் தீ விபத்து

Last Updated : Jun 9, 2023, 10:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details