சென்னை: தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2023ல் தனது இலக்குகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதில் அவர், 'பங்கேற்ற நிகழ்வுகளின் புகைப்படங்களுடன், எந்த மனிதனும் ஒரே நதியில் இரண்டு முறை அடியெடுத்து வைப்பதில்லை, ஏனென்றால் அது ஒரே நதி அல்ல, அவன் ஒரே மனிதன் அல்ல' என்ற வாசகம் அடங்கிய புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.
மேலும் அந்தப் பதிவில், '2023-ல் புத்தகம் வெளியிடுவது அவரது இலக்கு என்றும், ஆட்சியில் இருந்து வெளியேறியதும் அது வெளியிடப்படும்' என்றும் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவு தற்போது அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்புயுள்ளது.
முன்னதாக, அதிமுக அரசால் விகாரமான முறையில் விட்டுச்சென்ற மாநில நிதியை சீரமைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அவர் மீதான சுமையைக் குறைக்க வேண்டும் என்ற சாக்கில் திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
மேலும், புத்தாண்டை முன்னிட்டு, மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பழனிவேல் தியாகராஜன், ''உலகில் எனக்கு எத்தனை பதவி வந்தாலும் நான் பி.டி.ஆரின் மகன் என்பதே பெருமை, என் அடையாளம். அதற்கு மேல் யாராலும் எனக்கு எந்தப் பதவியும் கொடுக்கவும் முடியாது, எடுக்கவும் முடியாது" எனப் பேசியிருந்தார்.
தற்போது பழனிவேல் தியாகராஜனின் இந்த ட்விட் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. அவரை செயல்படவிடாமல் தடுப்பதால் விரக்தியில் அவர் கட்சியில் இருந்து விலக இருப்பதாக அவரது அபிமானிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மிகவும் நேர்மையானவர் எனவும், கறைபடாத கைகளுக்கு சொந்தக்காரர் என்றும், அவர் திமுகவில் இருந்து சென்றால், அது திமுகவுக்கு தான் நஷ்டம் என்றும் சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "ரூ.51,000 கோடி கடன் பெற தமிழ்நாடு அரசு திட்டம் - வருவாயை அதிகரிக்க நடவடிக்கை தேவை"