சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று காலத்தில், மருத்துவ அவசர தேவைகளுக்காக எம்ஆர்பி தேர்வில் தகுதி பெற்ற செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். பெருந்தொற்று காலத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த எம்ஆர்பி செவிலியர்களை கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தமிழ்நாடு அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்ஆர்பி தேர்வு எழுதி, இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி பணியமர்த்தப்பட்ட தங்களை பணி நீக்கம் செய்ததை ஏற்க முடியாது என்றும், தங்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பின்னர் செவிலியர்களுக்கு தற்காலிகப் பணி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இறுதியாக மாவட்ட சுகாதாரத் திட்டத்தின் கீழ் பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் பணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மாவட்ட சுகாதாரத் திட்டத்தின் கீழ் செவிலியர்கள் நியமனத்தில் குளறுபடி நடப்பதாக எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் உதயகுமார் இன்று(மார்ச்.5) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 2020ஆம் ஆண்டு எம்ஆர்பி மூலம் கரோனா பெருந்தொற்றின்போது சுமார் 6,000 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதில், 3,000 செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட்டது. மீதமுள்ள 3,000 செவிலியர்களை, கடந்த 2022 டிசம்பர் மாதம் 30ஆம் தேதி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, 6 மாத சம்பள நிலுவைத்தொகை வழங்கப்படாமலும் பணியில் இருந்து நீக்கினர். கரோனா பெருந்தொற்று காலத்தில் சுமார் இரண்டரை ஆண்டுகள் உயிரை பணயம் வைத்து பணியாற்றி எங்களை பணி நீக்கம் செய்தனர்.