முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் சிவகங்கை தொகுதியின் தற்போதைய மக்களைவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகிய இருவரும், பழைய மாமல்லபுரம் சாலையில் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்குச் சொந்தமான இடத்தை 2015ஆம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேசன் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்தனர்.
அதன் மூலம் பெற்ற 7 கோடியே 73 லட்சம் ரூபாயை வருமான வரி கணக்கில் காட்டாமல் மறைத்ததாக, கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவிற்காக அவர்களை ஜனவரி 21ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், விசாரணைக்கு நேரில் ஆஜராவதற்கு விலக்கு கேட்டும் கார்த்தி மற்றும் அவரது மனைவி இருவரும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.