40-வது அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரையேற்ற காவல்துறைக்கான போட்டிகள் ஹரியானா மாநிலம், பஞ்சகுலா மாவட்டத்தில் 31.3.2022 முதல் 11.4.2022 வரை நடைபெற்றது. இப்போட்டிகளில் மத்திய ஆயுதப்படை மற்றும் மாநில காவல்துறையைச் சேர்ந்த 18 குழுக்கள் பங்கேற்றன.
இப்போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த முதுநிலை காவலர் மணிகண்டன் 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் டிஜிபி ராஜஸ்தான் கோப்பை மற்றும் ஜெய்ப்பூர் சவால் கோப்பையும், முதுநிலை பெண் காவலர் சுகன்யா 1 தங்கமும் பீகார் முதல்வர் கோப்பை மற்றும் சிறந்த பெண் குதிரையேற்ற வீரருக்கான கோப்பையும்; குதிரை பராமரிப்பாளர் தமிழ்மணி Farrier போட்டியில் வெள்ளிப் பதக்கமும், முதுநிலை காவலர் மகேஸ்வரன் Police Horse Test போட்டியில் நான்காம் இடமும் பெற்றுள்ளனர்.
சென்னை பெருநகர காவல் குதிரைப்படையின் வரலாற்றில் முதன் முறையாக 2018-ம் ஆண்டு குதிரையேற்ற அணி (Equestrian Team) உருவாக்கப்பட்டது. அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை குதிரையேற்ற அணி பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும். தமிழ்நாடு காவல்துறை அணி பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்று ஒட்டுமொத்த பதக்க பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.