சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் 7வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தியா - மலேசியா இடையேயான இறுதிப் போட்டியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூரும் கலந்து கொண்டார்.
இறுதிப்போட்டி என்பதால் இரண்டு அணிகளும் தொடக்கம் முதலே பரபரப்பாக விளையாடினர். ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் இந்திய வீரர் ஜக்ராஜ் சிங், பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். இதனால், இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இதனையடுத்து, 14வது நிமிடத்தில் மலேசிய வீரர் அஸ்ராய் அபு கமல் கோல் அடிக்க, முதல் கால் பகுதியின் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமமாக இருந்தது.
தொடர்ந்து மலேசியா அணி அடுத்தடுத்து கோல் அடிக்க இந்திய அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மலேசிய அணியின் வீரர் ரஹீம் ராஸீ 18வது நிமிடத்திலும், அமினுதீன் 28வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனால் 2வது கால் பகுதியின் முடிவில் 3 - 1 என்ற கோல் கணக்கில் மலேசியா முன்னிலை வகித்தது.
அதன் பிறகு சுதாரித்து கொண்ட இந்திய அணியினர் ஆக்கோரஷமாக விளையாடினர். 45வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டோக் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார். அடுத்த நிமிடத்திலேயே குர்ஜந்த் சிங் கோல் அடிக்க, 3வது கால் பகுதியின் முடிவில் இரண்டு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமமாக இருந்தது.
கடைசி நேரத்தில் இரு அணிகளும் கடுமையாக மோத இந்திய அணியின் வீரர் ஆகாஷ்தீப் சிங் 56வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெறச் செய்தார். மீதம் இருந்த நேரத்தில் மலேசியா அணியை கோல் அடிக்க விடாமல் தடுத்த இந்திய அணி, இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தனது 4வது சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது, இந்தியா.