சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாக டிரோன் கண்காணிப்பு காவல் நிலையம் சென்னை அடையாறு முத்துலட்சுமி பூங்கா எதிரே அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிரோன் கண்காணிப்பு காவல் யூனிட், அமர்ந்த இடத்திலேயே சுமார் 5 கிலோமீட்டர் தூரம் வரை கண்காணிப்புப் பணிகளிலும், 10 கிலோமீட்டர் வரை குற்றச் சம்பவ வாகனங்களைத் துரத்தி பின்தொடரும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒன்பது யூனிட்டுகளைக் கொண்ட மூன்று வகையான ட்ரோன் கேமராக்கள் பயன்பாட்டுக்குக்கொண்டு வரப்பட்டுள்ளன. இவற்றுள் Quick Response Drone வகைகளில் 6 ட்ரோன்களும், Heavy Lift Drone வகையில் ஒன்றும், Long Range Drone வகையில் 2 ட்ரோன்களுடன், இந்த வான்வழி கண்காணிப்பு காவல் நிலையம் செயல்பட உள்ளது.
முதலாவதாக Quick Response Drone எனப்படும் "அதிதீவிர கண்காணிப்பு வகை ஆளில்லா விமானம்." இந்த வகை ஆளில்லா விமானத்தை, 5 கிலோமீட்டர் தூரம் வரை இயக்க முடியும். இவற்றின் மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், போக்குவரத்து நெரிசல்கள், பண்டிகை கால கூட்ட நெரிசல்கள் ஆகியவற்றை மிக எளிதாக கண்காணிக்க முடியும்.
இரண்டாவதாக "Heavy Lift Drone" எனப்படும் "உயிர்காக்கும் ட்ரோன்". விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை தினங்களில் பெசன்ட் நகர் கடற்கரையில் அதிகமாக கூடும் பொதுமக்கள் போலீசார் எச்சரிக்கையும் மீறி அவ்வப்போது கடலில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்தேறி வருகிறது. கடலில் சிக்கிக் கொள்பவர்களுக்கு தகுந்த நேரத்தில் உதவி கிடைக்காததால் இவ்வகை ஆபத்தில் அவர்கள் சிக்கிக் கொள்கின்றனர். கடல் அலையில் பொதுமக்கள் இறங்காதவாறு எச்சரிக்கை செய்யவும் ஒருவேளை பொதுமக்கள் யாரேனும் கடலில் இறங்கி ஆபத்தில் சிக்கிக் கொண்டால் உடனடியாக லைஃப் ஜாக்கெட், கயிறு ஆகிய உபகரணங்களை எடுத்துக்கொண்டு அவர்களிடத்தில் சேர்த்து ஆபத்தில் சிக்கி இருக்கும் நபர்களை, கரைக்குக் கொண்டு வரவும் இவ்வகை "உயிர் காக்கும் ட்ரோன்கள்" பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை ட்ரோன்கள் இரண்டு கிலோ மீட்டர் வரை கடலுக்குள் சென்று ஆபத்தில் இருப்பவர்களை மீட்கும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மூன்றாவதாக Long Range Drone எனப்படும் "குற்றவாளிகளை துரத்தும் ட்ரோன்கள்". இவ்வகை ட்ரோன்கள் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களில் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பிக்க நினைக்கும் குற்றவாளிகளை ஒலிபெருக்கி மூலம் சத்தமிட்டுக் கொண்டே துரத்தும். அதே வேளையில் அதில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உடனடியாக "வான்வெளி கண்காணிப்பு காவல் நிலையத்திற்கு" தகவல் அளிக்கும். இதன் மூலம் அருகில் இருக்கும் காவலர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க வழிவகை செய்யும்.
இவ்வகை ட்ரோன்கள் 10 முதல் 12 கிலோமீட்டர் தூரம் வரை குற்றவாளிகளின் வாகனங்களைத் துரத்தி காவல்துறையினருக்கு அலெர்ட் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மூன்று வகை ட்ரோன்களும் செயற்கை நுண்ணறிவு மூலமாக குற்றச் சம்பவம் நிகழ்ந்தாலோ அல்லது குற்றவாளிகள் தப்பிக்க முற்பட்டாலோ தொடர்ச்சியாக அடையாளம் கண்டு "வான்வெளி கண்காணிப்பு காவல் நிலையத்திற்கு" தகவல் அளித்துக் கொண்டே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரவு பகல் என சுமார் 30 போலீசார் சுழற்சி முறையில் இந்த காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சுமார் 3.6 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காவல் நிலையத்தை இன்று (ஜூன் 29) காலை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.
தமிழ்நாடு காவல்துறையை நவீனப்படுத்த வேண்டும், தொழில்நுட்பத்தை காவல்துறையில் பயன்படுத்த வேண்டும் என்பது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கனவு என டிஜிபி சைலேந்திரபாபு பேசினார். மேலும், தொழில்நுட்பம் பயன்படுத்துதல் மற்றும் காவல் துறையினரின் திறன்மேம்பாடு வளர்த்தல் ஆகிய இரண்டையும் மேம்படுத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டதன்பேரில் பல்வேறு நவீன முறைகளை காவல்துறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவிற்கே முன்னோடியாக முதன்முறையாக "வான்வெளி கண்காணிப்பு காவல் நிலையம்" தமிழகத்தில் அதுவும் சென்னையில் திறக்கப்படுவதாகவும் வருங்காலங்களில் சென்னை முழுவதும் இந்த வான்வெளி கண்காணிப்பு காவல் நிலையம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே முதல்முறையாக டிரோன் கண்காணிப்பு காவல் நிலையம் - அதுவும் சென்னையில்!
குற்றவாளிகளுக்கு செக் வைக்கும் விதமாக, இந்தியாவிலேயே முதல்முறையாக, சென்னையில், டிரோன் கண்காணிப்பு காவல் நிலையம் அடையாறு முத்துலட்சுமி பூங்கா எதிரே அமைக்கப்பட்டுள்ளது.
![இந்தியாவிலேயே முதல்முறையாக டிரோன் கண்காணிப்பு காவல் நிலையம் - அதுவும் சென்னையில்! india-first-drone-monitored-police-station-in-chennai](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/29-06-2023/1200-675-18874718-thumbnail-16x9-drone.jpg)
இந்தியாவிலேயே முதல்முறையாக டிரோன் கண்காணிப்பு காவல் நிலையம் - அதுவும் சென்னையில்!