தமிழ்நாடு

tamil nadu

பண்டிகை கால விடுமுறை: விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு.. கட்டணம் பல மடங்கு உயர்வு!

By

Published : Dec 22, 2022, 5:52 PM IST

பண்டிகை கால விடுமுறை காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டதோடு பயணிகள் விமான கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

விமான கட்டணம் அதிகரிப்பு
விமான கட்டணம் அதிகரிப்பு

சென்னை:கரோனா வைரஸ் ஊரடங்கு பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது கரோனா வைரஸ் பெருமளவு குறைந்து தமிழ்நாடு முழுவதும் சகஜ நிலை மீண்டும் திரும்பிவிட்டதால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளை கொண்டாடுவதில் தமிழ்நாடு மக்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

கிறிஸ்துமஸ் புத்தாண்டு விழாக்கள் மட்டுமின்றி பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை வரும் 24ஆம் தேதி தொடங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதோடு சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் கூட்டமும் இருப்பதால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகின்றது. மேலும் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் முன்பதிவுகளும் முடிந்துவிட்டன.

இதை அடுத்து வெளியூர் செல்லும் பயணிகள் விமான நிலையத்தை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பி உள்ளனர். இதனால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் குறிப்பாக தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய விமானங்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இதை அடுத்து சென்னையில் இருந்து செல்லும் விமானங்களில் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மதுரைக்கு நாள் ஒன்றுக்கு வருகை, புறப்பாடு என 10-12 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தற்போது 14 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், தூத்துக்குடிக்கு வருகை புறப்பாடு விமானங்கள் 6-ல் இருந்து 8ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று கோவைக்கு வருகை, புறப்பாடு 10 விமானங்களாக இருந்தது, தற்போது 16 விமானங்களாக அதிகரித்துள்ளது. திருச்சிக்கு 6 விமானங்களில் இருந்து 8 விமானங்களாகியுள்ளன. கொச்சி 10 விமானங்களாக இருந்தது, தற்போது 12 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதைப் போல் திருவனந்தபுரத்திற்கு வருகை புறப்பாடு 4 விமானங்களாக இருந்தது, தற்போது 6 விமானங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதை அடுத்து விமான பயண டிக்கெட் கட்டணங்களும் உயர்ந்துள்ளன. தூத்துக்குடிக்கு ரூ.5,000 என இருந்த டிக்கெட் விலை, தற்போது ரூ.13,000 முதல் ரூ.14,500 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் மதுரைக்கு ரூ.3,600 இருந்த டிக்கெட், ரூ.12,000 முதல் ரூ.14,000 வரையும், கோவைக்கு ரூ.3,500 இருந்த டிக்கெட் விலை, தற்போது ரூ.8,000 முதல் ரூ.13,500 வரையும் அதிகரித்துள்ளது.

மேலும் திருச்சிக்கு ரூ.3,500 இருந்த டிக்கெட், தற்போது ரூ.6,500 முதல் ரூ.10,000 வரையும், கொச்சிக்கு ரூ.3,500 என இருந்த டிக்கெட், தற்போது ரூ.10,000 முதல் ரூ.19,500 வரையும், திருவனந்தபுரத்திற்கு ரூ.5,150 இருந்த டிக்கெட், தற்போது ரூ.12,000 முதல் ரூ.21,000 வரையிலும் அதிகரித்துள்ளன.

டிக்கெட் விலைகள் ராக்கெட் போல் உயர்ந்தாலும் சொந்த ஊர்களில் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் பயணிகள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விமானங்களில் பயணிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details