சென்னை: நெய்வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு சிட்பண்ட், பைனான்ஸ், ரியல் எஸ்டேட் தொழில்கள், கல்வி நிறுவனங்களை நடத்திவரும் ஜெயப்பிரியா குழுமம் அதிகப்படியான வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.
புகாரின் அடிப்படையில் வருமானவரித் துறையினர் டிசம்பர் 16 முதல் 18ஆம் தேதிவரை நெய்வேலி, சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய பகுதிகளில் உள்ள ஜெயப்பிரியா குழுமத்துக்குச் சொந்தமான 30 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில் ஜெயப்பிரியா குழுமம் தங்களது பணப்பரிவர்த்தனை, தொழில் தொடர்பான ஆவணங்களைப் பாதுகாக்க கிளவுட் (Cloud) சர்வர்களைப் பயன்படுத்தி, நிர்வாக ரீதியிலான முக்கிய நபர்கள் மூலம் அதை ரகசியமாகப் பராமரித்துவந்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து வருமான வரித் துறையினர் தரப்பில், "சிட்பண்ட் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய கணக்கில் வராத வருமானத்துக்கு உண்டான டிஜிட்டல் ஆவணங்கள், பல்வேறு நபர்களிடமிருந்து பணம் பெற்றதற்கு உண்டான ரசீதுகள் சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல், ஜெயப்பிரியா குழுமம் கணக்கில் காட்டாத வருமானத்தை டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்ததற்கு உண்டான ஆவணங்கள் சிக்கியுள்ளன.
மேலும், கணக்கில் காட்டாத வருவாய் மூலம் ஜெயப்பிரியா குழுமம் அசையா சொத்துகள் பல வாங்கி அதன்மூலம் 250 கோடி ரூபாய் வருவாயை மறைத்துள்ளது. 30 இடங்களில் நடைபெற்ற இந்தச் சோதனையில் கணக்கில் காட்டாத பணம் 12 கோடி ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் காலமானார்