தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிதீவிர புயலாக மாறிய 'தேஜ் புயல்'... இரண்டு நாட்களுக்கு கடும் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - weather in chennai today

தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய தேஜ் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என்றும் அதனால் ஆழ்கடல் மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

அதி தீவிர புயலாக மாறிய 'தேஜ் புயல்'
அதி தீவிர புயலாக மாறிய 'தேஜ் புயல்'

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 4:33 PM IST

சென்னை: 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய தேஜ் புயல் நேற்று (அக். 21) நண்பகல் தீவிர புயலாகவும், இரவில் மிகத் தீவிர புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து அதிதீவிர புயலாக மேலும் வலுப்பெற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.

இது மேலும் வடமேற்கு திசையில் அடுத்த மூன்று தினங்களில் நகர்ந்து வரும் அக்டோபர் 24ஆம் தேதி மிகத்தீவிர புயலாக ஏமன் மற்றும் ஓமன் கடற்கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இன்று (அக். 22) தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:நாளை (அக். 23) மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

வடக்கு வங்கக்கடல் பகுதிகள், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரை பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அக்டோபர் 26ஆம் தேதி வரை காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அந்த நேரத்தில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆழ்கடல் மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவி - பாலஸ்தீனத்துக்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள்!

ABOUT THE AUTHOR

...view details