பாலாறு ஆற்றின் உபரிநீரைச் சேமிக்க தடுப்பணை கட்டமைப்பதற்கான வடிவமைப்பை (Design) மெட்ராஸ் ஐஐடி உருவாக்கியது. சாதாரணமாக தடுப்பணை கட்டுவதற்கு 82 கோடி ரூபாய் செலவாகும் நிலையில், ஐஐடி உருவாக்கிய இத்திட்டத்தின் மூலம் 32.5 கோடி ரூபாயுடன் தடுப்பணை கட்டிமுடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் உபரிநீரை மட்டுமல்லாமல், 49.5 கோடி ரூபாயையும் சேமிக்கலாம். இந்தத் தடுப்பணை கட்டுவதற்கான நிதியை கல்பாக்கம் அணுமின் நிலையம் வழங்கியுள்ளது. 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் தடுப்பணை கட்டமைப்பதற்கான பணிகள் தொடங்கப்ப்பட்டு பருவமழை தொடங்குவதற்கு முன் ஆகஸ்ட் மாதம் பணிகள் நிறைவுபெற்றன.
இது தொடர்பாக ஐஐடியில் பணிபுரியும் பேராசிரியர் சுந்தரவடிவேலு கூறுகையில், “தனித்துவமான முறையில் உருவாக்கப்பட்ட சுவர் மூலம் (DIaphragm wall) தடுப்பணை வெற்றிகரமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடல்நீர் ஊடுருவல் தடுக்கப்பட்டு, நீரின் தன்மை பாதுகாக்கப்படும்” என்று கூறினார்.
சென்னை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகப் பாலாறு ஆறு உள்ளது. சமீபகாலமாக, நிகழும் பருவநிலை மாற்றத்தினால் ஆறு பெரிதும் பாதிக்கப்பட்டு, மேற்கூறிய மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, குறைந்த செலவிலும், குறுகிய காலத்திலும் தடுப்பணை கட்ட ஐஐடி பேராசிரியர் சுந்தரவடிவேலுவை அணுகியுள்ளது.