சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த ஷோபா மற்றும் அவரது கணவர், அமெரிக்காவில் மென்பொறியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களது வீட்டில் தொன்மையான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த மாதம் இருமுறை சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 17 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 55 தொன்மையான சிலைகள் கைப்பற்றப்பட்டன.
3வது முறையாக சோதனை:இந்நிலையில், ஷோபாவின் வீட்டில் பூட்டப்பட்டிருந்த அறையில் மே 15 ஆம் தேதி சிலைக் கடத்ததல் தடுப்பு பிரிவு போலீசார் 3வது முறையாக சோதனை நடத்தினர். அப்போது 14 உலோக சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள், மரச்சிற்பங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக 22×11 செ.மீ நீளமுள்ள ராமர் உருவம், உருளை மீது நந்தி, ஜோடி புருஷா, கலைகாளி, நடராஜர் சிலைகள், விஷ்ணு, துறவி உள்ளிட்ட தஞ்சாவூர் ஓவியங்கள், பாயும் குதிரை, நின்ற யாளி, அனுமன் மண்டியிட்ட மரசிற்பங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
'அருங்காட்சியகத்தில் வாங்கினேன்': இதுகுறித்து ஷோபாவிடம் போலீசார் விசாரித்த போது, பெங்களூருவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து ரூ.6 லட்சம் கொடுத்து சிலைகளை வாங்கியதாகவும், அதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் நேரில் வந்து ஆவணங்களை சமர்பிப்பதாக ஷோபா தரப்பில் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷோபாவுக்கு சம்மன்: பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து சிலைகளும் மறைந்த பிரபல சிலைக்கடத்தல் குற்றவாளி தீனதயாளனிடம் இருந்து 2008 முதல் 2015ம் ஆண்டு காலகட்டத்தில் ஷோபா வாங்கியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைகள் எந்த கோயில்களில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். வீட்டில் அருங்காட்சியகம் வைப்பதற்கும், வெளிநாட்டில் விற்பனை செய்வதற்கும் பல்வேறு இடங்களில் உரிய ஆவணங்களின்றி, சிலைகளை ஷோபா வாங்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.