சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் தனசேகர் (37). இவரது மனைவி அகிலா (32) இருவருக்கும் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. திருமணம் ஆன சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
குழந்தையின் படிப்பு செலவிற்கு பணம் கேட்ட மனைவியை கொன்ற கணவன்! - wife murdered by husband
சென்னை: குழந்தையின் படிப்பு செலவிற்கு பணம் கேட்ட மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை நீலாங்கரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
அகிலா தனது அண்ணன் வீட்டில் வசித்து வந்த நிலையில், நேற்று மதியம் மூன்று மணியளவில் கணவரின் வீட்டிற்கு குழந்தையின் படிப்பு செலவிற்கு பணம் கேட்கச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், தனசேகர் கத்தியை எடுத்து அகிலாவின் தலை, மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் சரமாரியாகக் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், அகிலாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை கொலை செய்து விட்டு தப்பி ஒடிய தனசேகரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.