சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணன், மோகனாம்பாள் தம்பதி. இவர்களுக்கு 13 வயதில் மகள் உள்ளார்.
மோகனாம்பாள் அவரது கணவனை கேலி செய்ததுடன், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இவர்களது குடும்பத்தில் தினமும் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2012 டிசம்பர் 16ஆம் தேதி இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.
அப்போது கண்ணன் தனது மனைவியின் மீது அம்மிக் கல்லை போட்டு, கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார்.
பின்னர் கண்ணன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சென்னை 4ஆவது அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.ஆர்.வி.ரவி முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.முரளிகிருஷ்ணன், மனைவியை ஈவு இரக்கமின்றி கொலை செய்த கண்ணனுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதாகவும், உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமெனவும் வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, குற்றவாளி கண்ணனுக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமி கருக்கலைப்பு செய்யலாமா - உச்ச நீதிமன்றம் கூறுவது என்ன?