சென்னை: திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுவருகிறது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பல்வேறு மாவட்டங்களில் உள்ள திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.
மேலும் ஆக்கிரமிப்புகளை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திருக்கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் - அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக 540.39 ஏக்கர் நிலம், 496.1748 கிரவுண்டு சதுரடி மனைகள், 20.1434 கிரவுண்டு கட்டடம், 46.2077 கிரவுண்டு திருக்குளக்கரை ஆகியவை 991 ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. இதன் தற்போதைய மதிப்பு ரூ.2,043 கோடி ஆகும்.
கும்பகோணம் மாவட்டம் அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயிலுக்கு அருகே உள்ள வெங்கடாஜலபதி திருக்கோயிலுக்குச் சொந்தமான 3.47 ஏக்கர் நிலம் மற்றும் குத்தகைக்கு விடப்பட்டிருந்த 6.9 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருவானைக்காவல் அருகே, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த கத்ரி தயாராம் சிவ்ஜி அறக்கட்டளைக்குச் சொந்தமான 55 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.10 கோடி ஆகும்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம், கந்தசுவாமி பாளையம் அருள்மிகு கன்னமார் கருப்பண்ண சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான 2.75 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.