தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் வேரூன்ற முயற்சிக்கும் இந்துத்துவா சித்தாந்தம் - பேராசிரியர் இரா. திருநாவுக்கரசு - ADMK, DMK party

இந்து வாக்குகள் பற்றிய பேச்சுகள், இந்து மதத்தைக் காக்க வேண்டும் போன்ற விவாதங்கள், சமீப காலத்தில் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது. இதனால் பாஜகவைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் தமிழ்நாட்டில் வளர்ச்சி அடைந்து வருகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

tamil-nadu
tamil-nadu

By

Published : Oct 18, 2020, 8:58 PM IST

Updated : Oct 18, 2020, 9:43 PM IST

பாஜக மத்தியில் பெரும்பான்மையுடன் இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அப்படி ஒரு கட்சி இருக்கின்றதா, அவர்கள் முன்வைக்கும் சித்தாந்தம் என்ன என்று பலருக்கும் தெரியாது. இருப்பினும், தொடர்ந்து பாஜக தலைவர்கள் சர்ச்சையான கருத்துகள் மூலம் தமிழ்நாட்டில் பேசுபொருளாக ஊடகத்தின் வெளிச்சத்தில் இருந்து வருகின்றனர்.

ஆனால், தற்போது பாஜக, ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் சார்ந்த கருத்துகள் பெரிதும் பேசுபொருளாக மாறி வருகின்றது. குறிப்பாக இணையத்தில் பாஜக-விற்கு ஆதரவாகப் பலர் பேசி வருவது, தமிழ்நாடு அரசியல் கட்சிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

பேராசிரியர் இரா. திருநாவுக்கரசு

சட்டப்பேரவை தேர்தல் 2021 வருவதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், திராவிட சித்தாந்தம் கொண்ட அதிமுக, திமுக கட்சிகளைவிட இணையத்தில் பாஜக கட்சியின் செயல்பாடுகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. மத்தியில் ஆட்சியில் இருப்பது இதற்கு ஒரு காரணமாக தெரிவித்தாலும், அவர்களின் சித்தாந்தத்தை தமிழ்நாடு மக்களுக்கு எடுத்துச் செல்ல பல முயற்சிகள் செய்து வருகின்றனர்.

இதைப் பற்றி நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய பேராசிரியர் இரா. திருநாவுக்கரசு, '2004ஆம் ஆண்டில் வாஜ்பாய் காலத்தில் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கு மாறாகவே அனைத்தும் நடந்தது. வெளியே ஆதரவு இருப்பதுபோல் பிம்பம் உருவாக்கப்படுகின்றதே தவிர, அடிப்படையில் ஒரு கட்சி, அமைப்பு ரீதியாக மக்கள் மத்தியில் எப்படி இருக்கும் என்பது தான் இறுதி வெற்றியை முடிவு செய்யும். பிரபலங்கள் பாஜக-வில் இணைவதால் அந்தக் கட்சி பலமாகிவிட்டது என்று கூற முடியாது. ஏதோ ஒன்று எதிர்பார்த்துதான் ஒருவர் ஒரு கட்சியில் இணைகின்றனர்.

திராவிடக் கட்சிகள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று மக்களிடம் பாஜக எடுத்துச் செல்வது ஓரளவு வெற்றி பெற்றுள்ளது. இணையத்தில் பாஜக ஆதரவு பரப்புரை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், திராவிடக் கட்சிகளுக்கு பெரிதும் வாக்கு போடுபவர்கள் இந்துக்கள் தான். அதிமுக, திமுக அதிகாரத்திற்கு வாய்ப்பு இல்லை என்று தான் மூன்றாவது கட்சிக்கு செல்வார்கள்.

மேலும் அதிமுக, திமுக அமைப்பு ரீதியாகப் பெரிதும் பலம் பெற்று உள்ளனர். இதில் இரு கட்சிகளுக்கும் சமரசமே கிடையாது. இதை அனைத்தையும் உடைத்து வர வேண்டும் என்றால், பாஜக அடிப்படையில் இன்னும் அதிகப் பணிகள் செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில், பாஜக தங்களது கொள்கையினை அடிப்படையில் கொண்டு வர வேண்டும் என்று பல முயற்சிகள் செய்து வருகின்றது. ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி போன்ற அமைப்புகள் தங்களை மக்களுடன் இணைத்துக்கொள்ள பல தன்னார்வ சேவைகள் செய்து வருவதை மறுக்க முடியாது. இது போன்ற தொடர் முயற்சிகளினால் பாஜகவிற்கு நிச்சயம் பலன் இருக்கும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தீபாவளிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்? - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம்!

Last Updated : Oct 18, 2020, 9:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details