தமிழ்நாடு

tamil nadu

ஆவின் பாலை பாட்டிலில் விநியோகிக்கலாமே... அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை

By

Published : Feb 17, 2023, 10:33 PM IST

ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எரியும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய வழக்கில், ஒரு மாநகராட்சி அல்லது மண்டலத்தில் ஆவின் பாலை பாட்டிலில் சோதனை முறையில் விநியோகிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

High Court has recommended the government to distribute Aavin milk in bottles
High Court has recommended the government to distribute Aavin milk in bottles

சென்னை: பிளாஸ்டிக் நிலத்தையும் நீரையும் மாசுபடுத்தும் மிக முக்கிய காரணமாக விளங்குகிறது. அதிலும் ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி போடும் பிளாஸ்டிக் பொருட்கள் தினமும் டன் கணக்கில் குப்பைகளாக கொட்டப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு அரசு தடை விதித்திருந்தது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்து அரசு பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மட்கக்கூடிய பைகளுக்கு பெட்ரோகெமிக்கல் டெக்னாலஜி நிறுவனமும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் ஒப்புதல் அளித்துள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் சோபனா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பைகளை மட்கச் செய்வதற்கான உரக்கிடங்குகள் தமிழ்நாட்டில் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மட்கக்கூடிய பைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அந்த பைகளை மட்கச் செய்வதற்கான உரக்கிடங்கை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும்படி அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மட்கக்கூடிய பைகளை தயாரிக்க முடியுமென்றால், மூடப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களை தொடர்ந்து இயக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

மேலும், சோதனை முயற்சியாக ஏதேனும் ஒரு மாநகராட்சி அல்லது மண்டலத்தில் ஆவின் பாலை பாட்டிலில் விற்பது குறித்து நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்த போது, அதுகுறித்து ஆராய்ந்து விளக்கமளிப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கின் விசாரணை மார்ச் 8-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: பிரதமர் திட்டத்தில் இறந்தவர் பெயரில் வீடு ஒதுக்கீடு; அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை பாயுமா?

ABOUT THE AUTHOR

...view details