சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ருக்மன்காதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
2015இல் ஏற்பட்ட வெள்ளத்திற்கும் பிறகும் தமிழ்நாடு அரசு பாடம் கற்கவில்லை - உயர் நீதிமன்றம் கண்டனம்! - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்
![2015இல் ஏற்பட்ட வெள்ளத்திற்கும் பிறகும் தமிழ்நாடு அரசு பாடம் கற்கவில்லை - உயர் நீதிமன்றம் கண்டனம்! உயர் நீதிமன்றம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9645155-380-9645155-1606198420241.jpg)
11:35 November 24
சென்னை: 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்கு பிறகும், ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றுவதில் இருந்து தமிழ்நாடு அரசு பாடம் கற்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த மனுவில், "தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி 5ஆவது மண்டலமான ராயபுரத்தில் 5574 விதிமீறல் கட்டங்கள் கண்டறியபட்டுள்ளன. அதில், 1161 கட்டங்களை பொறுத்தவரை கட்டட பணிகளை நிறுத்தி வைத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 679 வீடுகளுக்கு சீல் வைப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 115 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மாநகராட்சி அலுவலர்கள் தேர்ந்தெடுத்த கட்டடங்களுக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுப்பதால் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.
5ஆவது மண்டலமான ராயபுரத்தில் மட்டும் 5,674 விதிமீறல் கட்டடங்கள் கண்டுபிடிக்கபட்டுள்ள போது சென்னை முழுவதும் 75 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை விதிமீறல் கட்டங்கள் இருக்கலாம். எனவே, 5ஆவது மண்டலத்தில் உள்ள 5,674 சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டுமென" குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு இன்று (நவம்பர் 24) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்ட விரோத கட்டடங்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் உள்ள நிலையில், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர். மேலும், இது தொடர்பாக தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாக துறை செயலர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார். சென்னையில் 5ஆவது மண்டலத்தில் மட்டும் இவ்வளவு விதிமீறல்கள் என்றால், தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தான் இருக்கும். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது அரசுத்துறை தலைவர்கள் கண்காணிக்க தவறிவிட்டதையே காட்டுகிறது. 2015 பெருவெள்ளத்திற்கு பிறகும் பாடம் கற்கவில்லை என நீதிபதிகள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், மனு தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர், 5ஆவது மண்டல உதவி ஆணையர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.