தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலத்தில் மறைந்த சமத்துவம் - மானுடத்தை மறந்த சென்னை! - சென்னை செய்திகள்

சென்னை: அவர்கள் கைகளும் அன்னம் தீண்டும் கைகளே என்று எண்ணாமல், எண்ணத்தில் ஏழ்மை கொண்ட சென்னை மாநகராட்சி அலுவலர்களின் அவலக்கதை.

coporation

By

Published : Oct 6, 2019, 10:07 AM IST

Updated : Oct 7, 2019, 10:15 AM IST

மானுடதிற்கும் மனிதனிற்கும் இடையில் என்னவிருக்கிறது இந்த நூற்றாண்டில் ஒன்றுமில்லை, இருப்பது வெறும் விஞ்ஞானம் மட்டுமே. விஞ்ஞானத்தை வைத்து நாற்றத்தை போக்கமுடியுமா?. நாற்றம் மனிதன் உள்ளவரை இருக்கும் என்பதை அறிந்து நாம் எப்போது செயல்படப்போகிறோம். நாற்றத்தில் சாதி, மதம் கிடையாது என்பதை ஏன் அறிய மறுக்கிறீர்கள்.

நாற்றம் என்ற வார்த்தை பயன்படுத்தாமல் மலம் என்று பயன்படுத்தியிருந்தால் மூக்கை பொத்தும் சிலருக்கு, எங்கே தெரியப்போகிறது மலத்தை அள்ளுபவனின் வலியும் வேதனையும். தேடிச் சேர்த்து, தின்று தீர்த்த நம் சமூகம் வாரிசுகளுக்கு வெறும் காகிதத்தையும் இயந்திரத்தையும் மட்டுமே அளிக்கப்போகிறது என்ற உண்மை எத்தனைப் பேருக்குத் தெரியும்.

இயந்திரத்தில், இதயத்தை பொருத்த முயற்சிக்கும் அறிவியல், இயந்திரமாகிக் கொண்டிருக்கும் மனிதனின் இதயத்தை எப்போது சரி செய்யப்போகிறது. இயந்திரத்திற்கு நாற்றம் தெரியுமா?, மலத்தின் அருவருப்பு தெரியுமா? குடலை புரட்டி எடுக்கும் துர்நாற்றம் தெரியுமா? ஆனால் மனிதனுக்கு தெரியும். நான் வேறு யாருக்கும் சொல்லவில்லை, மனிதன் என்பவன் நீயும் நானும் தான்.

மலத்தில் மறைந்த சமத்துவம்

மனிதக் கழிகளை மனிதர்களை வைத்தே அள்ள வைப்பது சரியா? வாக்கியமே தவறு மனிதக்கழிவுகளை குறிப்பிட்ட சில மனிதர்களை வைத்து அள்ள வைப்பது சரியா? எத்தனைச் சட்டம் வந்தாலும், மனிதன் மாறினால் தான் சட்டம் நிறைவுபெறும் என்பதற்கு சென்னையில் ஓர் அவல நிலை அரங்கேறியுள்ளது. சட்டம் கூட மலத்தைச் சென்றடைய யோசனை செய்கிறது போல.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதை தடை செய்யும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை என்பது ஒவ்வொரு முறையும் நிரூபணமாகிவருகிறது.

அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக சென்னை மைலாப்பூர் சாந்தோம் சர்ச் அருகே பத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், ஆம் மலம் அள்ளுபவர்கள் பாதாளச் சாக்கடைகளில் இறங்கி, எழுதினாலே உங்களுக்கு வீசும் அப்படிப்பட்ட நாற்றத்தை அவர்கள் தங்களின் ஐம்புலன்களையும் அடக்கிக்கொண்டு அள்ளுகிறார்கள். சட்டம் கூட மலத்தைச் சென்றடைய யோசனை செய்யும் காலத்தில் அவர்கள் அதனை அள்ளுவது, நம்மை கூனிக்குறுகச் செய்கிறது.

அங்கு மலத்தினால் ஏற்படும் நாற்றத்தையும் அருவருப்பையும் போக்க முடிந்த அவர்களால், அதனை அள்ளச் சொல்லும் மனிதர்களின் மனதிலிருந்து வீசும் நாற்றத்தையும் அருவருப்பையும் போக்க முடியவில்லை. இன்னும் அந்த நீங்கா நாற்றம் வீசுகிறது அவர்கள் மனதில். நாற்றம் உங்கள் மலத்தில் அல்ல, அதனை அள்ளச் சொல்லும் உங்கள் எண்ணத்தில். எண்ணத்தை மாற்றுங்கள். வருங்காலத்தில் நம் மீது நாற்றம் வீசாமலிருக்கும்.

இதையும் படிங்க:6 பட்டியலினப் பெண்களை மலம் உண்ண வைத்த கொடூரம் - காவலர்களைத் தாக்கியும் அட்டூழியம் செய்த கிராமத்தினர்!

Last Updated : Oct 7, 2019, 10:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details