தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 22, 2022, 3:03 PM IST

ETV Bharat / state

பச்சையப்பன் கல்லூரியின் 254 உதவிப்பேராசிரியர்களின் பணி நீக்கத்துக்குத் தடை!

பச்சையப்பன் அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட 254 உதவிப்பேராசிரியர்கள் பணி நியமனம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

HC
HC

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளைக்குச்சொந்தமான பல்வேறு கல்லூரிகளில் 2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை உதவிப்பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதால், அதுகுறித்து விசாரிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கல்லூரிகளில் 254 உதவிப்பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக்கூறி, அவர்களின் நியமனத்தை செல்லாது என அறிவித்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கு எதிராக உதவிப்பேராசிரியர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், "எங்கள் தரப்பு வாதத்தை கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நீதிக்கு எதிரானது. நாங்கள் போதிய தகுதியைப்பெறவில்லை எனக்கூறுவது தவறு. பல்கலைக்கழகமும், அரசும் எங்களது தேர்வு முறையை ஏற்றுக்கொண்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

பச்சையப்பாஸ் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 152 உதவிப்பேராசிரியர்கள் போதிய தகுதியை பெற்றிருக்கவில்லை எனக்கூறினார். அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், நீதிமன்றம் உத்தரவிட்டதாலேயே உதவிப்பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆய்வு செய்து அறிக்கை அளித்ததாக கூறினார்.

இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், 'ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் நடத்திய விசாரணையில், 150 உதவிப் பேராசிரியர்களின் வெய்டேஜ் மதிப்பெண்ணில் மட்டுமே தவறு நிகழ்ந்துள்ளதாகவும், ஆசியர்களின் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக உறுதி ஆகாத நிலையில், 254 உதவிப்பேராசியர்களின் பணி நியமனத்தை ஒட்டு மொத்தமாக ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு நிலைக்கத் தக்கதல்ல’’ என்று கூறி, வழக்கின் இறுதி விசாரணை முடியும் வரை, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: உதவி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு... விசாரணை ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details