தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 23, 2020, 10:54 AM IST

Updated : Jun 23, 2020, 2:01 PM IST

ETV Bharat / state

ஆர்.எஸ். பாரதியின் பிணையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி!

Madras high court
ஆர்.எஸ். பாரதி ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

10:47 June 23

சென்னை: வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தேனாம்பேட்டை அன்பகத்தில் நடந்த 'கலைஞர் பாசறை' கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் புகார் அளித்தார். 

இதையடுத்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பின்னர் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், மே மாதம் இந்த வழக்கில் ஆர்.எஸ். பாரதி கைதுசெய்யப்பட்டார்.

இவ்வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப் பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவில், கடும் நிபந்தனைகள் ஏதும் விதிக்காமல் ஆர்.எஸ். பாரதிக்கு அமர்வு நீதிமன்றம் பிணை வழங்கி உள்ளதாகவும், தொற்றுநோய் பரவலைக் காரணம் காட்டி பிணை வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, தனது பேச்சை மறுத்தால் அதை நிரூபிக்க அவரது குரல் மாதிரியை எடுக்க வேண்டும். எனவே அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் பிணையை ரத்துசெய்ய வேண்டும் எனக் காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது.

ஆர்.எஸ். பாரதி தரப்பில், பிணை மனு மீதான விசாரணையின்போது அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்பட்டதாகவும், பிணையை ரத்துசெய்ய எந்த காரணமும் இல்லை என்றும், விரோதப் போக்குடன் மாநில அரசு தற்போது இந்த மனுவைத் தாக்கல்செய்துள்ளதாகவும் வாதிடப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (ஜூன் 23) இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி சதீஷ்குமார், வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்கில் ஆர்.எஸ். பாரதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய பிணையை ரத்துசெய்ய மறுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Last Updated : Jun 23, 2020, 2:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details