தமிழ்நாடு

tamil nadu

'போக்குவரத்து துறைக்கு தனித்தேர்வு கொள்கைகளை வகுக்க வேண்டும்' - உயிர்நீதிமன்றம் உத்தரவு!

By

Published : Jul 13, 2019, 8:21 PM IST

சென்னை: அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாளர்கள் தேர்வு செய்ய, மூன்று மாதங்களில் தனித் தேர்வு கொள்கைகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Hc

ஐடிஐ ஃபிட்டர் படிப்பை முடித்து, போக்குவரத்து கழகத்தில் பயிற்சி பெற்றுள்ள திருநெல்வேலியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி கோவைசாமி என்பவர், தனக்கு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இதில், "வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 22 ஆண்டுகள் கடந்தும், இதுவரை தனக்கு நேர்முக தேர்வுக்கு அழைத்து எந்த கடிதமும் வரவில்லை என்பதால், 248 நாட்கள் பயிற்சி பெற்ற தனக்கு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்கும்படி அளித்த மனுவை பரிசீலிக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, "போக்குவரத்து கழகங்களில் உரிய முறையில் விளம்பரம் கொடுக்காமல் பணி நியமனங்கள் மேற்கொள்ளபடுவதாகவும், தேர்வு நடைமுறைகள் ஏதும் இல்லை என்றும் கூறி, அரசு பணியாளர் தேர்வாணையம் அல்லது வேறு அமைப்பின் மூலம் எழுத்து தேர்வு நடத்தி பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என 2014 ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில், நடத்துநர்கள், ஓட்டுநர்கள், இளநிலை, உதவி பொறியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதிகள் நிர்ணயித்து தேர்வுகள் மேற்கொள்வதாகவும், இவர்களின் கல்வி, வயது, அனுபவம் உள்ளிட்ட தகுதிகளை பரிசீலித்து செயல்முறை தேர்வு நடத்திய பிறகே பணிக்கு தேர்வு செய்யப்படுவதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை, நீதிபதி சசிதரன், பி.டி ஆஷா முன்னிலையில் இன்று நடைபெற்றது. "அரசு பணி நியமனத்தில் வெளிப்படைத்தன்மை பின்பற்ற வேண்டும். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய விளம்பரங்களை வெளியிட்டு, தகுதியுடைய அனைவரையும் போட்டியிட அனுமதித்து பணியாளர்களை தேர்வு செய்யவேண்டும்" என உத்தரவிட்டது.

போக்குவரத்து துறையில் பணியாளர்கள் தேர்விற்கு உரிய நடைமுறையை உருவாக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், அந்த நடைமுறைகளை ஏற்படுத்த எந்த நடவடிக்கையும் அரசு எடுக்க வில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 'போக்குவரத்து துறை பணியாளர்கள் தேர்விற்கு மூன்று மாதங்களில் தனி தேர்வு கொள்கைகளை வகுக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details