தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 18, 2021, 8:51 PM IST

ETV Bharat / state

சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அலுவலக வளாக கட்டடத்தை இடிக்க உத்தரவு!

சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அலுவலக வளாக கட்டடத்தை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

hc
hc

சென்னை : சட்டத்தை உருவாக்குபவர்களே அதை கையில் எடுத்து செயல்பட முடியாது எனக் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் சட்டவிரோத கட்டுமானத்தை உடனடியாக இடிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த டி.விஜயபாரதி என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், “பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் (சம்பந்தப்பட்ட எம்எல்ஏ பெயர் வழக்கில் குறிப்பிடவில்லை) அலுவலக வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், மாநகராட்சி அனுமதியின்றி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசு நிலத்தில் தனிநபர்கள் கட்டுமானங்களை உருவாக்குவது சட்டவிரோதம் என்று, குறிப்பிட்டுள்ள அவர் இது தொடர்பாக கடந்த ஜூலை 9ஆம் தேதி சென்னை மாநகராட்சி ஆணையர், 15ஆவது மண்டல அலுவலர்கள் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் கூறியுள்ளார்.

தனது மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து சட்டவிரோத கட்டடத்தை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி தரப்பில் தனது அலுவலக வளாகத்தில் கூட்ட அரங்கத்தை கட்டுவதற்கு தொகுதி எம்எல்ஏ கோரிக்கை வைத்ததாகவும், அதை பொதுப்பணித்துறை செய்து கொடுக்காததால், எம்.எல்.ஏ.-வே சொந்த செலவில் கூட்ட அரங்கை கட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தீவிரமான அராஜக செயலுக்கான முகாந்திரம் இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். எவ்வளவு உன்னதமான நோக்கமாக இருந்தாலும், அரசு துறைகள் கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதற்காக, சட்டத்தை உருவாக்குபவர்களே அதை கையில் எடுத்து செயல்பட முடியாது எனவும் தெரிவித்தனர்.
அரசு நிலத்தில் தனிநபரால் கட்டப்பட்டுவரும் கட்டுமானத்தை இடிப்பதற்கு தேவையான தகுந்த உடனடி நடவடிக்கைகளை எடுக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வேறு காரணங்களுக்காக அந்த இடம் பயன்படுத்துவதை அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறித்திபுள்ளனர். சட்டவிரோத கட்டுமானத்தின் மீது எடுத்த நடவடிக்கை குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க : பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details