தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 6, 2023, 7:54 PM IST

ETV Bharat / state

சென்னையில் எந்த பகுதியில் தாழ்தளப் பேருந்துகளை இயக்கலாம்? - அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தளப் பேருந்துகளை இயக்க முடியும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாழ்தள பேருந்து
தாழ்தள பேருந்து

சென்னை: சென்னையில் எந்தெந்த சாலைகளில் தாழ்தளப் பேருந்துகளை இயக்க முடியும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகத்தில் 1,107 பேருந்துகளை கொள்முதல் செய்யும் டெண்டரில், மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வகையிலான தாழ்தளப் பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரி, வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இருவகையான பேருந்துகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதுவாக எவ்வாறு இயக்கப்படும் என்பது குறித்த, செய்முறை விளக்கத்தை தரும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரதச்சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (பிப்.6) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தரப்பில், 650 மில்லிமீட்டர் உயரம் கொண்ட தளங்களுடன் கூடிய பேருந்துகளை தயாரிக்க ஒரு நிறுவனம் மட்டுமே தயாராக உள்ளதாகவும், அதற்கு 14 மாதங்கள் ஆகும் என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சென்னை, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் 442 தாழ்தளப் பேருந்துகள் 3 மாதங்களில் இயக்கப்படும் என்றும், 100 மின்சார தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதிகள், சென்னையில் தாழ்தளப் பேருந்துகளை எந்தெந்த சாலைகளில் இயக்க முடியும், எங்கு இயக்க முடியாது என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: தாம்பரத்தில் அடுத்தடுத்து வந்த 3 கார்கள் மோதி விபத்து!

ABOUT THE AUTHOR

...view details