தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயம்பேடு மார்க்கெட் திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு! - சென்னை உயர் நீதிமன்றம்

கோயம்பேடு மார்க்கெட் திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...!
கோயம்பேடு மார்க்கெட் திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...!

By

Published : Sep 10, 2020, 3:53 PM IST

Updated : Sep 10, 2020, 5:25 PM IST

15:49 September 10

சென்னை: கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியைத் திறக்கக் கோரும் வணிகர்களின் கோரிக்கை குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க தமிழ்நாடு அரசு மற்றும் சிஎம்டிஏ-வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்த மார்ச் மாதம் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகமானதைத் தொடர்ந்து, அதனை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு இயங்கிய கனிகள், பூக்கள் அங்காடிகள் கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும்; காய்கறிகள், மொத்த தானிய விற்பனை அங்காடிகள் கடந்த மே மாதம் முதல் வாரத்திலும் மூடப்பட்டன.

பின்னர் மொத்த காய்கறி அங்காடி திருமழிசையிலும், கனி அங்காடி மாதவரம் புறநகர்ப் பேருந்து நிலையத்திலும் தற்காலிகமாக செயல்படத் தொடங்கின.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு, சிஎம்டிஏ, வணிகர் சங்கங்கள் ஆகியவற்றின் பேச்சுவார்த்தையின் முடிவில், முதற்கட்டமாக உணவு தானிய மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பர் 18ஆம் தேதியும், காய்கறி மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பர் 28ஆம் தேதியும், அதன்பிறகு அடுத்த கட்டமாக கனி அங்காடி, சிறு மொத்த காய்கறி, கனி அங்காடிகள், மலர் அங்காடிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனி மொத்த விற்பனை அங்காடியைத் திறக்க அனுமதிக்கக்கோரி, சென்னை கோயம்பேடு 4ஆவது நுழைவுவாயிலில் கனி மொத்த வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் எம். செல்வம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர். ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். புருஷோத்தமன், கோயம்பேடு வணிக வளாகத்தில் சிறு வியாபாரிகள், பொதுமக்களை அனுமதித்ததுதான் கரோனா பரவ காரணமாக இருந்ததாகவும், மொத்த விற்பனையை அனுமதிப்பதில் சிக்கல் இல்லை எனவும் தெரிவித்தார். 

மேலும், மொத்த விற்பனை அங்காடியில் கடை வைத்துள்ளவர்களையும், பதிவு செய்துள்ளவர்களையும் விற்பனையில் ஈடுபட அனுமதிக்க வேண்டுமென ஆகஸ்ட் 31ஆம் தேதி சிஎம்டிஏ-விடம் மனு கொடுத்ததாகவும், 700க்கு மேற்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் சங்கத்தின் விண்ணப்பத்தை ஒரு வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க...'இரண்டாவது தலைநகர அந்தஸ்து திருச்சிக்கு வேண்டவே வேண்டாம்' - ஏன்?

Last Updated : Sep 10, 2020, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details