தமிழ்நாடு

tamil nadu

நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை

By

Published : Jun 5, 2019, 7:56 AM IST

சென்னை: ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் கோபால் உள்ளிடோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

nakkeran gopal

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால், நக்கீரன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு எதிராக, ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுத்தல், குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கு விசாரணைக்கு ஜூன் 10ஆம் தேதி நேரில் ஆஜராக நக்கீரன் கோபால் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இந்நிலையில், அழைப்பாணையை ரத்து செய்யக் கோரியும், எழும்பூர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரியும் நக்கீரன் கோபால் உள்பட ஐந்து பேர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுத்தல், குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதிவுசெய்யப்பட்ட இந்த வழக்கை, மத்திய-மாநில அரசுகளின் அனுமதியின்றி கீழமை நீதிமன்றங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என நக்கீரன் கோபால் தரப்பில் வாதிடப்பட்டது.

எழும்பூர் நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் நக்கீரன் கோபால் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சுதந்திர இந்தியாவில் ஆளுநரை பணி செய்யவிடாமல் தடுத்த பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்ட முதல் வழக்கு இதுதான் எனவும், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள போதுமான முகாந்திரம் உள்ளதா? என்பதை ஆராயாமல், கீழமை நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளதாக கூறி, எழும்பூர் நீதிமன்ற வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details