முதலமைச்சர், அமைச்சர்கள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பேசியது குறித்து தமிழ்நாடு அரசு அவதூறு வழக்குகளைத் தொடர்ந்து வருகிறது. தலைவர்களின் கருத்துகளை வெளியிட்டு தங்களுக்கு அவதூறு ஏற்படுத்தியதாக தினமலர், முரசொலி, தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, நக்கீரன் ஆகியவற்றின் மீதும் அவற்றின் ஆசிரியர்கள், நிர்வாகிகள் மீதும் அரசுத் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதன்படி, 2012ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி முரசொலி நாளிதழ் மீது 20 வழக்குகளும், டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி ஹிந்து, நக்கீரன், தினமலர் மீது தலா 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
அரசின் அவதூறு வழக்குகளை ரத்துசெய்யக்கோரி அரசியல் கட்சியினர் தொடர்ந்த வழக்குகள், மக்கள் பிரதிநிதிகளின் வழக்குகள் என தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு முன்னிலையில் விசாரணையில் உள்ளன. தங்கள் மீதான வழக்குகளை ரத்துசெய்யக்கோரியும், அதற்கான அரணானையை ரத்து செய்யக்கோரியும் தி ஹிந்து தரப்பில் என்.ராம், கோலப்பன், பத்மநாபன், சித்தார்த் வரதராஜன் ஆகியோரும், நக்கீரன் தரப்பில் கோபால், முரசொலி தரப்பில் செல்வம், தினகரன் தரப்பில் ஆர்.எம்.ஆர். ரமேஷ், டைம்ஸ் ஆஃப் இந்தியா தரப்பில் சுனில் நாயர், சந்தானகோபாலன், தினமலர் தரப்பில் ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளின் விசாரணை நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நடைபெற்று வந்தது. அப்போது, “தலைவர்களின் கருத்துகளைப் பதிவு செய்யும் விதமாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடும்போது, அந்தக் கருத்துகளின் அடிப்படையில் தங்கள் மீது அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யபடுகிறது. இது பத்திரிகைகளின் கருத்து சுதந்திரத்தை நசுக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட அவதூறு தண்டனைச் சட்டத்தை இந்த அரசும் கடைப்பிடித்து வருகிறது. மக்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் விதமாக செய்திகள் வெளியிட்டால் அவதூறு வழக்கு தொடரப்படுகிறது ” என்று பத்திரிக்கை நிறுவனம் சார்பாக வாதிடப்பட்டது.
நக்கீரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி. பெருமாள், தனிநபர் மீது விமர்சனம் செய்து கருத்துகள் வெளியிட்டாலும், அரசின் செலவில்தான் இந்த அவதூறு வழக்குகள் பதியப்படுகிறன்றன என்பதால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இந்து குழுமம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ். ராமன், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக அதிகளவில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யபடுவதாகக் குறிப்பிட்டார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இன்று வழங்கிய தீர்ப்பில், நாட்டின் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகங்கள் இருப்பதாகவும் , ஜனநாகயத்தின் காவலர்களாக அவர்கள் திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சியில் ஊடகங்கள் மிக முக்கிய பங்காற்றுவதாகவும், ஆனால் கடந்த சில வருடங்களாக ஊடகம் உள்ளிட்ட ஜனநாகயத்தின் ஒவ்வோரு பகுதியும் சிதைந்து வருவதாகவும், அவற்றை விரைவில் அகற்றாவிட்டால் அது தீப்போல பரவி பேராபத்தாகவிடும் என தெரிவித்தார்.
நம் நாட்டின் தேசிய கொடி, தேசிய கீதத்தை மதிக்கும் நாம், நாட்டின் முக்கிய நோக்கமான சத்தியமே வெல்லும் என்பதை சில நேரங்களில் மறந்து விடுகிறோம் என்றும் நம் நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற இது மிகவும் முக்கியம் என தெரிவித்தார். இதை கருத்தில் கொண்டு அனைத்து ஊடகங்களும் செயல்படும் என நம்புவதாக தெரிவித்தார். மேலும், கட்டுப்படுத்த முடியாத நீரோடை கிராமப்புறங்களையும், பயிர்களையும் மூழ்கடிப்பதை போல, கட்டுப்படுத்த முடியாது பேனாவும் அழிவை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
இந்திய ஊடகங்கள் மிகவும் மதிப்பிற்குரியது என்றும் அதனால் தான் ஊடகங்களுக்கு இதுவரை கடினமான விதிமுறைகள் பிறக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
ஊடகங்களின் முக்கிய நோக்கம் சேவை தான் என மகாத்மா காந்தி கூறியதை சுட்டிகாட்டிய நீதிபதி, அதன்படி ஊடகங்கள் தங்களை சுய ஆய்வு செய்து, அடுத்த தலைமுறையின் மேம்பாட்டுக்கு துணையாய் நிற்கும் என தெரிவித்தார். ”பத்திரிகைகள் அவர்களின் கடமைகளைத் தான் செய்கின்றன. அப்படி இருக்கும்போது அவற்றின் மீது அரசு எப்படி அவதூறு வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியும்” என்று கூறி பத்திரிகைகள் மீது போடப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்துசெய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:'விசாரணை முடியும் வரை மூடிய மதுக்கடைகள் திறக்கப்படாது' - புதுச்சேரி அரசு உறுதி