சென்னை: மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்வதற்குத் தேர்வான முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவர்கள் பட்டியலைத் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில், ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி தேவ தர்ஷினி 518 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். குரோம்பேட்டை அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவன் சுந்தர்ராஜன் 503 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் மாநில அளவில் இரண்டாவது இடமும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது என அரசுப் பள்ளி மாணவன் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாணவன் சுந்தர்ராஜன் கூறுகையில், "சென்னை குரோம்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தேன். அதன் பின்பு நீட் தேர்வு எழுதி அதில் 503 மதிப்பெண் பெற்றேன்.
இந்த நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் தரவரிசை பட்டியலில் மாநில அளவில் இரண்டாம் இடமும், செங்கல்பட்டு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் சென்னை மருத்துவக் கல்லூரி கிடைக்குமா என்று எதிர்பார்த்து இருந்தேன். தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை பட்டியலில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளதால் நிச்சயம் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என நம்பிக்கை வந்துள்ளது.
வரும் 20 ஆம் தேதி மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான கவுன்சிலிங் நடைபெற உள்ளது. நிச்சயம் சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து படித்து வந்தால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறலாம்" என மாணவன் சுந்தர்ராஜன் கூறினார்.
நீட் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தது மகிழ்ச்சி இதையும் படிங்க:பாடத்திட்டத்தில் திருக்குறளை தவிர்ப்பதா? - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை