தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குட்கா எளிதில் கிடைப்பதை கவனத்துக்கு கொண்டு வரவே சட்டப்பேரவைக்கு குட்கா எடுத்து வரப்பட்டது -  திமுக வாதம்! - உயர்நீதிமன்றத்தில் திமுக பதில்

சென்னை : குட்கா எளிதில் கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வரவே சட்டப்பேரவைக்கு குட்கா பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன என்றும், சபாநாயகருக்கு எதிராக எந்த அவமதிப்பும் செய்யவில்லை என்றும் திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

gutka
gutka

By

Published : Aug 12, 2020, 7:00 PM IST

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டமன்றத்துக்கு எடுத்து வந்தது தொடர்பான உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 சட்டப்பேரவை உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில் இன்று (ஆக. 12), இவ்வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், என்.ஆர்.இளங்கோ, அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள், உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் இறந்து விட்டதாகவும், கு.க.செல்வத்துக்காக தாங்கள் ஆஜராகவில்லை எனவும் தெரிவித்தனர்.

மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பாக, ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், உரிமை மீறல் குழு தலைவராக இப்பிரச்னையை விசாரிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினர்.

தமிழ்நாட்டில் குட்கா எளிதில் கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வரவே சட்டமன்றத்துக்கு குட்கா பொருள்களை எடுத்துச் சென்றதாகவும், சபாநாயகருக்கு எதிராக எந்த அவமதிப்பும் செய்யவில்லை எனவும், எந்த உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை எனவும் தெரிவித்த வழக்கறிஞர்கள், சட்டப்பேரவைக்குள் கருத்துரிமை உள்ளது எனவும், கருத்து தெரிவித்ததற்காக உரிமை மீறல் பிரச்னையை எழுப்ப முடியாது எனவும் தெரிவித்தனர்.

மேலும், ”உரிமை மீறல் நோட்டீஸ் சட்டவிரோதமானது. இதில் நீதிமன்றம் தலையிட முடியும். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பியதால் தான் உரிமை மீறல் பிரச்னை எழுப்பப்பட்டுள்ளது” எனவும் அவர்கள் வாதிட்டனர்.

உரிமை மீறல் என முடிவெடுத்த சபாநாயகர், இந்த விவகாரத்தை உரிமைக் குழுவுக்கு அனுப்பாமல் சட்டப்பேரவையிலேயே விவாதித்திருக்க வேண்டும் என்றும், சட்டப்பேரவையின் உரிமை மீறல் பிரச்னையை எடுத்து உரிமைக் குழுவுக்கு அனுப்பியபோது தங்கள் தரப்பு கருத்துகளைத் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் அவர்கள் வாதிட்டார். இந்த வழக்கின் விசாரணை நாளை (ஆக. 13) ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details